காலிலிருந்து சுரக்கும் செரடோனின்.. அகலமாகும் வாய்..மலைக்க வைக்கும் வெட்டுக்கிளிகளின் ஸ்கெட்ச்!
டெல்லி: காய்ந்த பயிர்களை பார்த்தவுடன் ஒன்றாக குவியும் வெட்டுக்கிளிகளின் கால்களிலிருந்து செரடோனின் என்ற ஒரு திரவம் சுரக்கும். இதனால் அவற்றின் வாய் மற்றும் தசைகள் அகலமாவதால் பயிர்களை சர்வநாசம் செய்கின்றன என பூச்சியியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
Recommended Video
கொரோனா கொரோனா என்ற சொல் போய் வெட்டுக்கிளி வெட்டுக்கிளி என வந்துவிட்டது. காரணம் வெட்டுக்கிளிகளால் உணவு உற்பத்திக்கே பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது என்பதால்தான்.
இவை தற்போது இந்தியாவுக்குள் நுழைந்து ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்த வெட்டுக்கிளிகள் குறித்த தகவல்களை பார்ப்போம்.
வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க முடியவில்லை.. பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்
6 மாதங்கள்
பாலைவன வெட்டுக்கிளிகள் ஆன இவை ஆப்பிரிக்கா, இந்திய துணை கண்டம், சில ஐரோப்பிய மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளில் பெரும் அளவில் காணப்படுகின்றன. இதன் வாழ்நாள் 3 முதல் 6 மாதங்களாகும். ஒவ்வொரு பெரிய வெட்டுக்கிளியும் 2 முதல் 3 இன்ச் வரை வளரும். இவை பாலைவனங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. அங்குள்ள மணல்களில் முட்டையிடுகின்றன. மழை பெய்த பிறகு ஈரப்பதம் உள்ள மணல்களில் மட்டுமே முட்டையிடுகின்றன.
வாய் அளவு
ஒற்றுமையுடன் பாலைவனப் பகுதிகளை விட்டு வெளியேறுகின்றன. காய்ந்த பயிர்களை கண்டால் போதும் கூட்டமாக கூடுகின்றன. அப்போது பின்னங்கால்களில் உள்ள தொடைகள் ஒன்றுடன் ஒன்று உரசுவதன் மூலம் அவற்றின் கால்களில் செரடோனின் என்ற திரவம் சுரக்கிறது. இது தசைகளை வலுப்படுத்துகின்றன. அதன் வாயின் அளவையும் பெரிதாக்குகின்றன.
காற்று
புதிதாக வலுவடைந்த தசைகள் ஒன்றாக புலம்பெயர்ந்து உணவை தேடி செல்லும் ஆற்றலை தருகிறது. வேட்டையாடும் பறவைகளின் கண்களில் மணலை தூவ உயிர்வாழும் தொழில்நுட்பத்தை இவை பயன்படுத்துகின்றன. அதாவது கிட்டதட்ட நாம் சிறுவயதில் படித்த சிங்கம் மாடு கதைதான். இவை கூட்டமாக ஒற்றுமையுடன் புலம்பெயர்வதால் பறவைகளுக்கு இரையாகாமல் தப்புகின்றன. காற்றின் சாதகத்தை பொருத்து மணிக்கு 16 முதல் 19 கி.மீ. வேகத்தில் பறக்கும் ஆற்றல் கொண்டவை.
வெட்டுக்கிளிகள்
இவற்றால் 200 கி.மீ. தூரம் வரை பறக்க முடியும். இதன் புலம்பெயரும் வேகத்திற்கு பின்வருவனவை எடுத்துக்காட்டாக உள்ளன. 1988ஆம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கரீபியனுக்கு சுமார் 5000 கி.மீ. தூரத்தை வெறும் 10 நாட்களில் கடந்துள்ளது என்றால் அதன் வேகத்தை பார்த்துக் கொள்ளுங்கள். கடந்த 2019-ஆம் ஆண்டு பருவநிலை மாற்றத்தால் கென்யா போன்ற நாடுகளில் தொடர் புயல்கள் மற்றும் கனமழை ஏற்பட்டது. இது போன்ற சூழல்தான் வெட்டுக்கிளிகள் முட்டையிட ஏற்ற சூழல் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
வெட்டுக்கிளிகள் மனிதர்களை தாக்குமா
இவை மனிதர்களை கடிக்காது, தாக்கவும் செய்யாது. அவை பயிர்கள் மற்றும் செடிகளை மட்டுமே குறிவைக்கும். ஆனால் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த வெட்டுக்கிளிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்கிறார்கள். வெட்டுக்கிளிகளின் பயிர் சேதத்தை தடுக்க அவற்றை ஆர்கானோபாஸ்பேட் என்ற ரசாயனம் கொண்டு கொல்லப்படுகின்றன.
நகரங்கள்
இந்த பணியை வேளாண்துறை அமைச்சகம் செய்து வருகிறது. இரவு நேரங்களில் ஆளில்லா விமானம் மூலம் பயிர்களில் ரசாயனம் தூவப்படுகிறது. மாலத்தியான் 96 என்ற ரசாயனம் மூலம் வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த ரசாயனத்தை பயன்படுத்துவதால் மக்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடாது என்பதால் நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள மக்கள் பகல் நேரத்தில் வெளியே செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேளாண்துறை அமைச்சகம்
இரண்டாவது ஆண்டாக இந்த வெட்டுக்கிளிகள் இந்தியாவில் நுழைந்துள்ளது. கடந்த ஆண்டு ராஜஸ்தானில் இந்த வெட்டுக்கிளிகள் நுழைந்த போதிலும் அவை தீவிரமாக கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் ஆயிரம் கோடிக்கணக்கான சேதத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் கடைசியாக 1997ஆம் ஆண்டு இந்த வெட்டுக்கிளிகளை பார்த்ததாக கூறப்படுகிறது. அது போல் 1926 மற்றும் 1931 ஆம் ஆண்டுகளில் அதிக அளவிலான வெட்டுக்கிளிகள் இந்தியாவுக்குள் நுழைந்து பயிர்களை நாசம் செய்ததால் உணவு தட்டுப்பாடுக்கும் வழிவகுத்தது என வேளாண்துறை தெரிவித்துள்ளது.