தலைமை நீதிபதிக்கு எதிராக சதியா? விசாரணை குழு அமைப்பு.. சிபிஐ, உளவுத்துறை உதவ அதிரடி உத்தரவு!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக பொய்யான பாலியல் புகார் சுமத்தப்படுவதாக தொடுக்கப்பட்ட வழக்கில் விசாரணை நடத்துவதற்காக ஓய்வுப்பெற்ற நீதிபதி ஏகே பட்நாயக் தலைமையில் குழு அமைக்கப்பட்டு
டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக பொய்யான பாலியல் புகார் சுமத்தப்படுவதாக தொடுக்கப்பட்ட வழக்கில் விசாரணை நடத்துவதற்காக ஓய்வுப்பெற்ற நீதிபதி ஏகே பட்நாயக் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் வழக்கில் அடுத்தடுத்த திருப்பம் ஏற்பட்டு வருகிறது. 35 வயதாகும் பெண் ஒருவர் ரஞ்சன் கோகாய் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
ஜூனியர் பணியாளாக உச்சநீதிமன்றத்தில் இவர் பணியாற்றி வந்தவர். ஆனால் இதை தலைமை நீதிபதி மறுத்து இருந்தார்.
2016-17 வருமானவரித்துறை கணக்குப்படி ஜெ.,விற்கு வங்கியில் ரூ.10 கோடி இருப்பு..ஐகோர்ட்டில் தகவல்
இன்னொரு வழக்கு
இதையடுத்து திடீர் திருப்பமாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பொய்யான பாலியல் புகார் சுமத்தினால் ரூ.1.5 கோடி தருவதாக சிலர் தன்னை அணுகியதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உட்சவ் பெயின்ஸ் புகார் அளித்தார். வழக்கறிஞர் உட்சவ் பெயின்ஸ் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இந்த வழக்கு தற்போது தனியாக விசாரிக்கப்படுகிறது.
விசாரணை குழு
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் தீபக் குப்தா, ரோஹிங்க்டன் நாரிமன் அமர்வு விசாரிக்கிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தற்போது விசாரணை குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ஓய்வுப்பெற்ற நீதிபதி ஏகே பட்நாயக் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விசாரிக்க இவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
என்ன செய்ய போகிறார்
உண்மையில் தலைமை நீதிபதிக்கு எதிராக சதி நடக்கிறதா என்பதை விசாரிக்கவே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகாரில் வழக்கறிஞர் பெயின்ஸ் யார் பெயரை எல்லாம் குறிப்பிட்டாரோ அவர்களிடம் எல்லாம் ஏகே பட்நாயக் விசாரணை நடத்துவார். இதனால் முக்கியமான நபர்கள் விசாரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது .
கண்டிப்பாக உதவி
அதேபோல் இந்த வழக்கில் ஏகே பட்நாயக்கின் விசாரணைக்கு இந்திய உளவுத்துறை, சிபிஐ, டெல்லி போலீஸ் மூன்றும் உதவ வேண்டும். ஏகே பட்நாயக் கேட்கும் அனைத்து உதவிகளை செய்ய வேண்டும் என்று கடுமையான உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்கள். இதனால் இந்த வழக்கு தற்போது மிக முக்கியமான கட்டத்தை எட்டி இருக்கிறது.