வங்கதேச விடுதலைப் போர்... வங்க கடலில் மர்மமாய் 'மாண்டுபோன' பாக். நீர்மூழ்கி கப்பல் காஸி!
டெல்லி: 1971-ல் வங்கதேச விடுதலைக்கான இந்தியா- பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தானின் நீர்மூழ்கிக் கப்பல் காஸி மூழ்கடிக்கப்பட்ட மர்மம் இன்னமும் நீடிக்கிறது.
கிழக்கு பாகிஸ்தானாக இருந்த நிலப்பகுதி மீது பாகிஸ்தான் ராணுவம் கொடூர அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டது. இதனையடுத்து கிழக்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியா- சோவியத் யூனியன் களமிறங்கின.
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்தன. வரலாற்றின் பக்கங்களில் பேசப்படும் வங்கதேச விடுதலைப் போர் 13 நாட்கள் நடைபெற்றன. இந்த போரின் முடிவில் கிழக்கு பாகிஸ்தான், வங்கதேசம் எனும் புதிய நாடாக மலர்ந்தது.
இந்த யுத்தம் பாகிஸ்தானின் தளபதி நியாசி உட்பட 93,000 படையினரின் சரணடைதலுடன் டிசம்பர் 16-ல் முடிவடைந்தது. இதனையே Vijay Diwas என நாடு கொண்டாடி வருகிறது. இந்த வங்கதேச விடுதலைப் போரில் மிக முக்கியமான மர்மம் ஒன்று இன்றளவும் நீடிக்கிறது.
அதுதான் பாகிஸ்தானின் நீர்மூழ்கிக் கப்பலான காஸி (PNS Ghazi). இந்தியாவுக்கு எதிரான யுத்தங்களில் பாகிஸ்தானின் ஆகப் பெரும் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தது காஸி நீர்மூழ்கிக் கப்பல். அமெரிக்காவுக்கு சொந்தமான இந்த காஸி நீர்மூழ்கிக் கப்பல் பின்னர் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட்டது.
வங்கதேச விடுதலைப் போரின் போது இந்தியாவின் உக்கிரமான வியூகங்களால் முடங்கிப் போனது பாகிஸ்தான் ராணுவம். இதனையடுத்து இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்தை தகர்த்து அழிக்கும் நாசகார திட்டத்துடன் காஸி நீர்மூழ்கிக் கப்பல் சட்டவிரோதமாக இந்தியாவின் வங்க கடற்பரப்பில் நுழைந்தது.
இந்த நாசகார நீர்மூழ்கிக் கப்பல் பின்னர் வங்கக் கடலிலேயே வெடித்து சிதறுண்டு அழிந்தது. ஆனால் நாசகார காஸி நீர்மூழ்கிக் கப்பல் எவ்வாறு அழிந்தது? என்பதற்கான உறுதியான விடைகள் இதுவரை தெரியவில்லை. இந்திய கடற்படைதான் இந்த நீர்மூழ்கிக் கப்பலை தாக்கி அழித்தது என கூறப்பட்டு வருகிறது.
ஆனால் விசாகப்பட்டினம் துறைமுகத்தைத் தாக்கும் முயற்சியில் தாங்கள் கடலுக்கு அடியில் வைத்த கண்ணிவெடியில் சிக்கி காஸி சிதறிப் போனது என்கிற கருத்தை பாகிஸ்தான் சொல்கிறது. இந்த காஸி நீர்மூகிக் கப்பல் சுமார் 90 பேர் இருந்தனர். 1971-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி காஸி நீர்மூழ்கிக் கப்பலின் கதை முடிக்கப்பட்டது.
இந்த காஸியின் கதையை முடித்த வரலாற்றில் ஒரு தமிழருக்கும் பெரும் பங்கு இருக்கிறது.. அவர்தான் நாகர்கோவிலில் பிறந்த வங்கதேச யுத்தத்தின் போது கிழக்கு கடற்படை தளபதியாக இருந்த என். கிருஷ்ணன். இவர்தான் நாசகார நீர்மூழ்கிக் கப்பல் காஸியின் சகாப்தத்துக்கு முடிவுரை எழுதிய சூத்திரதாரி என்கிறது தேசத்தின் பெருமைமிகு வரலாற்றுப் பக்கங்கள்.
காஸி சினிமா
2017-ம் ஆண்டு காஸி நீர்மூழ்கிக் கப்பலை மையமாக வைத்து The Ghazi Attack என்ற சினிமா ஒன்றும் வெளியானது. ராணா டகுபதி, நாசர், கே கே மேனன், அதுல் குல்கர்னி என பலரும் நடித்த இந்த திரைப்படம் முழுவதும் மயிர்கூச்செறியும் காட்சிகளைக் கொண்டதாகும்.