தலைமை நீதிபதி மீது பொய் பாலியல் புகாரளித்தால் ரூ 1.5 கோடி தருவோம்.. இது சதி.. வக்கீல் பேட்டி!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பொய்யான பாலியல் புகார் சுமத்தினால் ரூ.1.5 கோடி தருவதாக சிலர் தன்னை அணுகியதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் பேட்டி அளித்து இருக்கிறார்.
டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பொய்யான பாலியல் புகார் சுமத்தினால் ரூ.1.5 கோடி தருவதாக சிலர் தன்னை அணுகியதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உட்சவ் பெயின்ஸ் பேட்டி அளித்து இருக்கிறார். வழக்கறிஞர் உட்சவ் பெயின்ஸ் இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
தற்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் ரஞ்சன் கோகாய். இவர் மீது 35 வயதாகும் பெண் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின், ஜூனியர் பணியாளாக பணியாற்றி வந்தவர் இவர். இவரது புகார் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
என்ன கூறினார்
22 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இது தொடர்பாக அந்த பெண் பிரமாணபத்திரம் அனுப்பி உள்ளார். இதுகுறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ''இது போன்ற பொய்ப் புகார் அடிப்படை ஆதாரமற்றது. இப்படி புகாரை கூறியுள்ளதன் மூலமாக நீதித்துறைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. நீதித்துறையின் ஸ்திரத்தன்மையை உடைப்பதற்கு யாரோ பின்னிலிருந்து இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள். '' என்று குறிப்பிட்டார்.
அதிர்ச்சி தகவல்
இந்த நிலையில்தான் தற்போது திடீர் திருப்பமாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பொய்யான பாலியல் புகார் சுமத்தினால் ரூ.1.5 கோடி தருவதாக சிலர் தன்னை அணுகியதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உட்சவ் பெயின்ஸ் பேட்டி அளித்து இருக்கிறார். வழக்கறிஞர் உட்சவ் பெயின்ஸ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு இது குறித்து பேட்டி அளித்துள்ளார்.
கூறியது என்ன
அவர் தனது பேட்டியில், கடந்த சில தினங்களுக்கு முன் என்னை ஒருவர் வந்து சந்தித்தார். அவர் என்னிடம் 50 லட்சம் ரூபாய் கொடுத்து தலைமை நீதிபதி மீது பொய்யான பாலியல் புகார் அளிக்க வேண்டும். அப்படி செய்தால் ரூ.1.5 கோடி கொடுப்போம். ஒரு பெண்ணை அழைத்து வந்து செய்தியாளர்கள் முன்னிலையில் தலைமை நீதிபதிக்கு எதிராக பேச வைக்க வேண்டும் என்று கூறினார்கள்.
மேலும் என்ன
ஆனால் அவர்கள் சொன்னதில் உண்மை இருப்பது போல எனக்கு தெரியவில்லை. அதேபோல் அவர்கள் சொன்னதில் நிறைய ஓட்டைகள் இருப்பது போலவும் தெரிந்தது. அதனால் அவர்களை உடனே அங்கிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல சொல்லிவிட்டேன். இது எனக்கு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது என்று வழக்கறிஞர் உட்சவ் பெயின்ஸ் பேட்டி அளித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் பேஸ்புக்கிலும் போஸ்ட் செய்துள்ளார்.
விசாரணை
இது தொடர்பாக உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் உட்சவ் பெயின்ஸ் பேட்டி அளித்து இருக்கிறார். மேலும் இது தொடர்பாக அவர் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணபத்திரமும் தாக்கல் செய்துள்ளார். இந்த தொடர் நிகழ்வுகளால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.