டெல்லி போர்க்களம்:காலை 8.30 மணி சிங்கு எல்லை-பகல் 2 மணி செங்கோட்டையில் சீக்கியர் கொடி- நடந்தது என்ன?
டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வரும் விவசாயிகளில் ஒருபிரிவினர் இன்று உச்சகட்ட போராட்டமாக டெல்லிக்குள் நுழைந்து செங்கோட்டையில் சீக்கியர் கொடியை ஏற்றியதால் தலைநகரமே போர்க்களமாக மாறியது.
2 மாதங்களுக்கும் மேலாக டெல்லி எல்லையில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் அமைதிவழியில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களின் ஒருபகுதியாகவே குடியரசு தினமான இன்று டெல்லியில் பல லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
37 நிபந்தனைகளுடன் டெல்லி போலீசார் இந்த டிராக்டர்கள் பேரணிக்கு அனுமதி அளித்தனர். குடியரசு தின ஊர்வலம் முடிவடைந்த பின்னர் பகல் 12 மணி முதல் இந்த டிராக்டர்கள் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று காலையிலேயே போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு, தடியடி, கண்ணீர்புகை குண்டு வீச்சு என ரணகளமாகிப் போனது டெல்லி.
காலை 8.30 மணி: சிங்கு எல்லையில் முதல் மோதல் ஏற்பட்டது. விவசாயிகளில் சிலர் போலீஸ் தடுப்புகளை அகற்றினர். இப்பகுதியில் நிலைமையை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் காசிப்பூர், திக்ரி எல்லைகளில் பதற்றம் உச்சமாக இருந்தது.
8.45 மணி: டெல்லி- ஹரியானாவின் திக்ரி எல்லையில் போலீஸ் தடுப்புகளை உடைத்துக் கொண்டு சில விவசாயிகள் டிராக்டர் பேரணியை தொடங்கிவிட்டனர்.
9.30 மணி: சிங்கு எல்லையில் தொடங்கிய டிராக்டர் பேரணி டெல்லியின் சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகரை வந்தடைந்தது.
10.15 மணி: காசிப்பூர் எல்லையில் போலீஸ் தடுப்புகளை உடைத்துக் கொண்டு டிராக்டர்கள் முன்னேற போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
11.00 மணி: சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகரில் போலீசாருடன் டிராக்டர் பேரணியில் பங்கேற்றவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அங்கும் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்தனர் போலீசார்.
11.30 மணி: டெல்லி மீரட் எக்ஸ்பிரஸ் சாலையில் பாண்டவ் நகர் பகுதியில் போலீஸ் தடுப்புகளை உடைத்துக் கொண்டு முன்னேறினர். வடக்கு ட்லெலியின் முகர்பா செளக் பகுதியில் போலீசாருடன் மோதல் வெடித்தது. இதனால் அங்கும் கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டன. டிராக்டர் பேரணியில் பங்கேற்ற சிலர் அனுமதிக்கப்பட்ட பாதைகளை மாற முயற்சித்தனர். கர்னால் பைபாஸில் போலீஸ் தடைகள் உடைக்கப்பட்டன. டெல்லி முழுவதும் 7 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. போலீசாரிடம் இருந்து கண்ணீர்புகை குண்டு வீசும் துப்பாக்கியையும் சிலர் பறிமுதல் செய்தனர். சில இடங்களில் போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை மூளுமானால்.. ஸ்டாலின் எச்சரிக்கை
11.45 மணி: அனுமதிக்கப்பட்டிருந்த பாதைகளில் போலீசார் முறைப்படி திறந்துவிட்டனர். காசிப்பூர், சிங்கு, திக்ரி எல்லைகளில் ஒரே நேரத்தில் போலீசார் தடுப்புகளை அகற்றினர்.
12.15 மணி: காசிப்பூர் டிராக்டர்கள் அக்சர்தாம் சென்றன. அங்கிருந்து அனுமதிக்கப்பட்ட பாதையில் செல்லாமல் ஐடிஓ சென்று யமுனை நதி பாலத்தை கடந்து டெல்லி போலீஸ் தலைமையகத்தின் முன் உள்ள தடுப்புகளை உடைத்து எறிந்தனர்.
12.20 மணி: நொய்டாவில் போலீசார்- விவசாயிகளிடையே மோதல் வெடித்தது. சிலர் போர்க்களத்துக்கு செல்வது போல வாளேந்தி, கவச உடையுடன் மோதலில் ஈடுபட்டனர்.
12.50 மணி: காசிப்பூர் எல்லை அருகே சிந்தாமணி செளக் பகுதியில் போலீசார் மீண்டும் தடியடி நடத்தினர். நங்கோலி பகுதியில் போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
1.00 மணி : ஐடிஓ பகுதியில், பேருந்துகள் தாக்கப்பட்டன. விவசாயிகளில் பலர் டெல்லி செங்கோட்டை நோக்கி முன்னேறினர். இதை தடுக்க முயன்றபோதும் போலீசார் மீது டிராக்டர்களை ஏற்ற முயற்சித்தனர். இதனையடுத்து அங்கும் போலீஸ் தடியடி நடத்தப்பட்டது. கண்ணீர்புகை குண்டுகள் விசப்பட்டன. டிராக்டர் ஒன்று கவிழ்ந்து விவசாயி ஒருவர் உயிரிழந்தார். ஆனால் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டினர்.
2.00 மணி: சிங்கு எல்லையில் இருந்து புறப்பட்ட விவசாயிகளில் ஒரு பிரிவினர் வெளிவட்ட சுற்றுச் சாலை வழியாக (நங்கோலி, திஸ் ஹசாரி) செங்கோட்டையை அடைந்து செங்கோட்டையின் கோபுர உச்சியில் சீக்கியர் கொடியை ஏற்றினர். இருப்பினும் இத்தகைய போர்க்கள சூழல்களுக்கு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். டெல்லியில் இருந்து விவசாயிகள் அனைவரும் எல்லைகளுக்கு திரும்பவும் உத்தரவிட்டனர்.