குரங்கை வீடியோ எடுத்த நபர்.. இரக்கமற்ற கொடூரன் என வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. என்னதான் நடந்தது?
டெல்லி: விலங்குகளின் நடவடிக்கைகளை யாராவது படம் பிடித்தால் நாம் பாராட்டுகிறோம், ரசிக்கிறோம். ஆனால் இந்த ஒரு வீடியோவில் இதை எடுத்தவரை சமூகவலைதளங்களே திட்டி தீர்த்து வருகின்றன. அப்படி என்னதான் அந்த வீடியோவில் இருக்கிறது, வாங்க பார்க்கலாம்!
இந்த வீடியோவில் ஒரு குரங்கின் குட்டி ஒன்று ஒரு மரத்தின் அருகே விளையாடி கொண்டிருக்கிறது. தாயோ உணவு தேடி வெளியே சென்றுவிட்டது. இந்த குட்டி விளையாடி கொண்டிருந்த நேரத்தில் கீழே கிடந்த மரத்தில் ஒரு சிறிய துளையில் அந்த குட்டி குரங்கு சிக்கிக் கொள்கிறது.
அந்த குரங்கோ எப்படியாவது வெளியே வர முயற்சிக்கிறது. அருகில் உள்ள செடிகளின் கிளைகளை பிடித்துக் கொண்டு வர முயல்கிறது. அப்போதும் முடியவில்லை.
குரங்கின் பிரச்சினை
தொடர்ந்து வெளியேற முயற்சித்து முயற்சித்து அந்த குரங்கு சோர்வடைந்து விடுகிறது. ஒரு கட்டத்தில் செய்தறியாமல் திகைக்கிறது. அந்த நேரம் பார்த்து ஹீரோ போல் ஒரு நாய் வருகிறது. அந்த சின்னஞ்சிறிய குரங்கின் பிரச்சினையை அறிந்த அந்த நாய், உடனே அதற்கு உதவுகிறது.
வாயை வைத்து கவ்வி
அந்த குரங்கின் கழுத்தில் வாயை வைத்து கவ்வி இழுக்க பார்க்கிறது நாய். ஆனால் அதனால் முடியவில்லை. இது போல் பல முறை முயலும் அந்த நாய் சிறிதும் சோர்வடையாமல் குரங்கின் தலையை கவ்வியபடி இழுக்கிறது. பின்னர் முன்பக்கமாக இழுத்தால் குட்டியால் எளிதாக வெளியே வர முடியும் என்ற நேக்கை நாய் தெரிந்து கொள்கிறது.
கவ்விய நாய்
உடனே அந்த நாய் முன்பக்கமாக வந்து குரங்கின் கழுத்தில் கவ்வி இழுக்கிறது. அப்போது குரங்கும் தனது உடலை இழுத்து பிடித்தவாறே வெளியே வருகிறது. பின்னர் வழக்கம் போல் விளையாட சென்றுவிடுகிறது. இந்த நாயும் ஒரு குட்டியை காப்பாற்றிய திருப்தியுடன் நிற்கிறது.
|
வைரல்
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. குரங்கு குட்டியின் அவஸ்தையை அறிந்து நாய் செய்த உதவியையும் நாயால் தமக்கு ஆபத்து ஏதும் இல்லை, தம்மை காப்பாற்றவே அது வந்துள்ளது என அறிந்து கொண்ட குரங்கின் புத்திசாதுர்யத்தையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
மனிதர்களைவிட விலங்குகள்
அதே சமயத்தில் இந்த குரங்கு நாம் பார்க்கும் வீடியோவில் குறுகிய நேரமாக மரத்துளைக்குள் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படுவது தெரிகிறது. ஆனால் உண்மையில் எவ்வளவு நேரம் அதுபோல் அவஸ்தைபட்டது என தெரியவில்லை. இத்தனை காட்சிகளை படம் பிடிக்கும் அந்த நபருக்கு வீடியோ எடுப்பதில் இருக்கும் ஆர்வம் குரங்கை காப்பாற்றுவதில் இல்லையே என நினைத்து நெட்டிசன்கள் அவரை வறுத்து வாயில் போட்டுக் கொண்டனர். மனிதர்களைவிட விலங்குகளே சிறந்தவை என கூறுகிறார்கள் நெட்டிசன்கள்.