கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஆதார் கட்டாயமா? சுகாதார துறை அமைச்சகம் விளக்கம்
டெல்லி: கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளக் கோ-வின் செயலியில் ஆதார் எண்ணைப் பதிவிட வேண்டியது கட்டாயம் இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முதல்கட்டமாகச் சுகாதார ஊழியர்களுக்கு முன் களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகின்றன.
தடுப்பூசி செலுத்தும் பணிகள் கோ-வின் என்ற மொபைல் செயலி மூலம் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள விரும்பும் நபர் கோ-வின் செயலியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னரே, அவரால் தடுப்பூசி எடுத்துக்கொள்ள முடியும்.
இந்நிலையில், கோ-வின் செயலி ஐநாவின் இந்தியா அலுவலகத்துடன் இணைந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது என்று சுகாதார துறை இனை அமைச்சர் அஸ்வினி சவுபே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும், கோ-வின் செயலியில் தடுப்பூசி எடுத்துக்கொள்ளப் பதிவு செய்ய ஆதார் கட்டாயம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கோ-வின் செயலியில் உள்ள தனியுரிமை குறிப்பு அஸ்வினி சவுபே கூறுகையில், "கோ-வின் செயலியை பயன்படுத்துபவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்யப்பட்ட அனைத்தும் முறையாக என்கிரிப்ட் செய்யப்படுகிறது, இதில் பதிவு செய்யும் தரவுகளை வெகு சிலரால் மட்டுமே அணுக முடியும்" என்றும் அவர் தெரிவித்தார்.