வங்கி சேவை, சிம் வாங்க ஆதார் கட்டாயமில்லை.. சட்டத் திருத்தம் கொண்டு வருகிறது மத்திய அரசு
டெல்லி: ஆதாரில் தனிப்பட்ட தரவிற்கான பாதுகாப்பை சேர்ப்பதோடு, பயனாளரின் தனியுரிமையை உறுதிப்படுத்தும் விதமாக சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.
வங்கி கணக்கு, சிம் கார்டு, பள்ளி, அரசின் திட்டங்களை பெற என ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் ஆதார் எண் விவகாரத்தில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததால், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தனிமனித தரவுகளை அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக ஆதார் எண் உள்ளது. எனவே, ஆதார் சட்டத்தில் பிரிவு 57- லில் பயனாளரின் தனியுரிமையை உறுதிப்படுத்தும் விதமாக சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது.
மேலும், தனிப்பட்ட தரவுகான பாதுகாப்பை சேர்ப்பதோடு, வங்கி கணக்கு, சிம் கார்டு வாங்குவதற்கு கை விரல் ஸ்கேனிங் போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், ஆதார் தொடர்பான சட்டத்தில் சில மாற்றங்கள் செய்து லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய அமைச்சரவை அதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. இதனால், தனிநபர் தகவல்களை திருடுவது தடுக்கப்படும் என கூறப்படுகிறது.
இதன்படி வங்கி சேவைகள், மாணவர் சேர்க்கை, சிம் கார்டு வாங்குவது உள்ளிட்டவற்றுக்கு ஆதார் எண்ணைத் தர வேண்டிய கட்டாயம் இல்லை. அவற்றைத் தரத் தேவையும் இல்லை என்ற பாதுகாப்பை மத்திய அரசு வழங்கவுள்ளது.