இனி கிரேட்டர் கைலாஷில் மாதந்தோறும் சுந்தர காண்டம் பாராயணம்- ஆம் ஆத்மி எம்எல்ஏ அறிவிப்பு
டெல்லி: மாதந்தோறும் முதல் செவ்வாய்க்கிழமைகளில் சுந்தரகாண்டம் பாராயணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளரும் கிரேட்டர் கைலாஷ் எம்எல்ஏ சவுரப் பாரத்வாஜ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ஒவ்வொரு மாதமும் செவ்வாய்க்கிழமைகளில் சுந்தர காண்டம் கிரேட்டர் கைலாஷ் தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் பாராயணம் செய்யப்படும்.
வரும் செவ்வாய்க்கிழமை எனது தொகுதிக்குட்பட்ட சிராக் டெல்லியில் மாலை 4.30 மணிக்கு நடத்தப்படும் பாராயணத்தில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
சுந்தர காண்டம் என்பது வால்மீகி ராமாயணத்தின் 5ஆவது காண்டமாகும். இது அனுமரின் அறிவுக் கூர்மையையும் வீரத்தையும் சொல்வன்மையையும் பெருமையையும் பற்றி கூறுவதாகும். இதை பாராயணம் செய்தால் மனதுக்கு நிம்மதி ஏற்படுவதுடன். தைரியமும் தரும். நோயுற்றவர்கள், குழந்தைகளின் திருமணச் செலவு போன்ற சூழல்களில் இதை படித்தாலோ அல்லது கேட்டாலோ உரிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதில் இலங்கைக்கு சீதையை பார்க்க அனுமன் சென்றது குறித்தும் கூறப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு அனுமன் பக்தர். இவர் சில நாட்களுக்கு முன்னர் நடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது அனுமன் கோயிலுக்கு அடிக்கடி சென்று வந்தார். அது மட்டுமில்லாமல் அனுமன் சாலிசாவை படித்து காட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை பாஜகவினர் கிண்டல் செய்தனர். இந்து ஓட்டுக்களுக்காக அவர்களை கவர கெஜ்ரிவால் இவ்வாறு செய்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
हर महीने के पहले मंगलवार को सुन्दर कांड का पाठ अलग अलग इलाकों में किया जाएगा।
— Saurabh Bharadwaj (@Saurabh_MLAgk) February 18, 2020
निमंत्रण- सुन्दर काण्ड
शाम 4:30 बजे
18 फरवरी, मंगलवार
प्राचीन शिव मंदिर, चिराग दिल्ली
(निकट चिराग दिल्ली मेट्रो स्टेशन गेट नo1) pic.twitter.com/CwGAXzAW5r
இரண்டாவது முறை டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றவுடன் கன்னாட் பகுதியில் உள்ள அனுமன் கோயிலுக்கு சென்றிருந்தார். அண்மையில் நடந்த தேர்தல் முடிவுகள் வெளியான போது ஆம் ஆத்மி 62 இடங்களில் வெற்றி பெற்று 3ஆவது முறையாக வெற்றி பெற்றது. அப்போது தொண்டர்களை சந்தித்த கெஜ்ரிவால் இந்த வெற்றிக்கு அனுமனின் கருணைதான் காரணம் என தெரிவித்திருந்தார்.