கோவா தேர்தலில் லட்சம் லட்சமாக செலவழித்த ஆம்ஆத்மி!டெல்லி மதுபானஊழல் பணம் பற்றி பரபர குற்றப்பத்திரிகை
டெல்லி மதுபான ஊழலில் சம்பாதித்த பணத்தை ஆம் ஆத்மி கட்சி கடந்த ஆண்டு நடந்த கோவா சட்டசபை தேர்தலில் செலவு செய்துள்ளதாக அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் பரபரப்பான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் பற்றி சிபிஐ, அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் அமலாக்கத்துறை சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், டெல்லி மதுபான கொள்கை ஊழல் புகாரில் சம்பாதித்த பணத்தை ஆம் ஆத்மி கட்சி கடந்த ஆண்டு நடந்த கோவா சட்டசபை தேர்தலில் லட்சம் லட்சமாக செலவழித்துள்ளதாக பரபரப்பான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக உள்ளார். துணை முதலமைச்சராக மணிஷ் சிசோடியா உள்ளார். கடந்த 2021ம் ஆண்டு டெல்லி அரசு புதிய மதுபான கொள்கையை கொண்டு வர முடிவு செய்தது.
2021 நவம்பரில் இந்த புதிய மதுபான கொள்கை அமலுக்கு வந்தது. இதற்கிடையே இந்த புதிய மதுபானக் கொள்கையில் பணமோசடி நடந்திருப்பாக டெல்லி துணைநிலை ஆளுநர் விகே சக்சேனாவுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு 2022 ஜூலையில் திரும்ப பெற்றது.
மதுபான ஊழல்:தெலுங்கானா முதல்வர் மகள் கவிதாவிடம் 7 மணிநேரம் சிபிஐ தீவிர விசாரணை..அடுத்து கைது?
சிபிஐ வழக்கு
இருப்பினும் புதிய மதுபான கொள்கையில் ஊழல், முறைகேடு நடந்துள்ளதாக கூறி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு, சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தினர். புகார்களின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உள்பட பலரது வீடுகளில் சோதனை செய்தனர். மேலும் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு நெருக்கமானவர்களாக கூறப்படும் விஜய் நாயர், 9 தொழிலதிபர்கள், 2 மதுபான ஆலை மீது சிபிஐ சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு விஜய் நாயர் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.
அமலாக்கத்துறை விசாரணை
மேலும் இந்த புதிய மதுபான கொள்கை விஷயத்தில் கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியிருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறையும் விசாரிக்க தொடங்கியது. இதில் ‛‛சவுத் குரூப்'' என்ற தொழிலதிபர்களுடன் இணைந்து ஆம் ஆத்மி தலைவர்களுக்கு ரூ.100 கோடி வரை வழங்கப்பட்டதாக புகார்கள் உள்ளன. ஆம் ஆத்மி கட்சி சார்பில் விஜய் நாயர் இதனை பெற்று கொண்டதாக கூறப்படுகிறது.
தெலங்கானா தொழிலதிபர் குழு
இந்த சவுத் குரூப் தொழிலதிபர்கள் குழுவில் தெலுங்கானா முதல்வர் கேசிஆர் மகள் கவிதா எம்எல்சி, அக்கட்சியின் எம்பி மகுண்டா ஸ்ரீனிவாசுலு ரெட்டி, அவரது மகன் ராகவ் மகுண்டா உள்ளிட்டவர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் இந்த குழுவை தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகரராவின் மகளும் எம்எல்சியுமான கவிதா கட்டுப்படுத்துவதாக கூறப்பட்டது. இந்நிலையில் தான் சமீபத்தில் அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்நிலையில் தான் தற்போது அமலாக்கத்துறை சார்பில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் பரபரப்பான தகவல்கள் உள்ளன. அதன்படி, ‛‛டெல்லி மதுபான ஊழல் புகாரில் ஹைதராபாத்தை சேர்ந்த தொழில்அதிபர் அபிஷேக் போயின்பல்லி, டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் உதவியாளர் தினேஷ் அரோராவுடன் நெருக்கமாக இருந்தார்.
கோவா தேர்தலில் செலவு
ஆம் ஆத்மி கட்சிக்கு சட்டவிரோதமாக பணம் கைமாற்றப்பட்டுள்ளது. இந்த பணம் கோவா மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. கோவா சட்டசபை தேர்தல் சர்வே தொடர்பான குழுவில் இடம்பெற்றிருந்தவர்களுக்கு மட்டும் ரூ.70 லட்சம் வரை செலவிடப்பட்டது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவா தேர்தலில் என்ன நடந்தது?
முன்னதாக கடந்த ஆண்டு உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களுடன் கோவாவுக்கும் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் கோவாவில் பாஜக மீண்டும் அங்கு ஆட்சியை தக்க வைத்தது. 40 தொகுதிகள் கொண்ட சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 21 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அக்கட்சி 20 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றியது. மாறாக ஆம்ஆத்மி கட்சி தனித்து போட்டியிட்ட நிலையில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில் தான் ஊழல் பணத்தை கோவா தேர்தல் பிரசாரத்துக்கு ஆம் ஆத்மி பயன்படுத்தி உள்ளதாக அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.