டெல்லி கலவரம்.. பெட்ரோல் குண்டை வீசியது அவரா.. சந்தேக வலையில் ஆம் ஆத்மி கவுன்சிலர்.. ஷாக் வீடியோ!
டெல்லி: டெல்லியில், ஆம் ஆத்மி கவுன்சிலர் ஒருவர் குண்டு வீசி வன்முறையில் ஈடுபட்டதை போன்ற வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த தாக்குதலில்தான், உளவுத்துறையில் டிரைவராக பணியாற்றிய அங்கித் சர்மா கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும், டெல்லியில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. வட கிழக்கு டெல்லி பகுதியில் கலவரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கடந்த சில நாட்களில் மட்டும் இந்த கலவரங்களில் 36 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
காலக்கொடுமை! டெல்லி பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்ய சரியான நேரம் இல்லையாம்.. ஹைகோர்ட்டில் போலீஸ்
கொலை
சாந்த் பக் ஏரியாவில், அங்கித் சர்மா என்ற 26 வயதான நபர் கல்வீசி கொல்லப்பட்டு, சாக்கடைக்குள் வீசப்பட்டார். இவர், மத்திய உளவுத்துறையில், டிரைவர் பணியில் இருந்தவர். இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி கவுன்சிலரான, தாகிர் ஹுசைனுக்கு, இந்த கொலையில் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவரது வீட்டுக்கு அருகேயுள்ள சாக்கடை கால்வாயில் இருந்துதான் அங்கித் சர்மா சடலம் கண்டெடுக்கப்பட்டது.
|
பெட்ரோல் குண்டு
இந்த நிலையில்தான், தாகிர் ஹுசைன் வீட்டின் மாடியிலிருந்து, பெட்ரோல் குண்டுகள், கற்கள் சிலரால் வீசப்படுவது போன்ற வீடியோ இப்போது வெளியாகியுள்ளது. அதில் சிவப்பு ஸ்வெட்டர் போட்டபடி தாகிர் ஹுசைன் நிற்கிறார். கற்குவியல், பெட்ரோல் குண்டுகள் அவர் வீட்டு மொட்டை மாடியில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
உருட்டுக் கட்டை
இவரும் கையில் உருட்டுக் கட்டை வைத்துள்ளார். அதை நெட்டிசன்கள் தனியாக ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஜூம் செய்து பார்த்து, இது தாகிர்தான் என அடித்துச் சொல்கிறார்கள். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. #ArrestTahirHussain என்ற ஹேஷ்டேக், தேசிய அளவில் டுவிட்டரில் டிரெண்ட்டாகி வருகிறது.
மறுப்பு
இந்த நிலையில்தான், தாகிர் ஹுசைன், ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தான் தாக்குதலில் ஈடுபடவில்லை என மறுத்துள்ளார். சில கும்பல் எனது வீட்டுக்குள் நுழைந்து, மொட்டை மாடியில் ஏறி நின்று தெருவில் போவோர் மீது தாக்குதல் நடத்தியது. நான் போலீசுக்கு உடனே போன் செய்து சொன்னேன். ஆனால், அவர்கள் மெதுவாகத்தான் வந்தனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதில் எது உண்மை என்பது பற்றி டெல்லி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.