டெல்லியில் ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மி தீவிரம்.! ஆட்டோ கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது
டெல்லி: டெல்லி மாநிலத்தில் ஆட்டோ ரிக்ஷா கட்டணத்தை 18.75 சதவீதம் உயர்த்தி, ஆம் ஆத்மி அரசு வெளியிட்டுள்ள அரசாணை வர உள்ள சட்டமன்ற தேர்தலை குறிவைத்தே செய்யப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
ஆட்டோ கட்டணத்தை உயர்த்தினால் மக்களின் எதிர்ப்பு தானே வரும். ஓட்டு எப்படி வரும் என்று யோசிக்கிறீர்களா, ஏனெனில் ஆம் ஆத்மி ஆட்டோ ரிக்ஷா தொழிலாளர்களின் வாக்குகளை தான் குறி வைத்து காய் நகர்த்தியுள்ளது.
ஆம் ஆத்மி கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, நாடே எதிர்பார்க்காத வகையில் அசுர வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஆம் ஆத்மியின் வெற்றியில் ஆட்டோ ரிக்ஷா தொழிலாளர்களின் பங்கு அளப்பரியது.
தலைநகர் டெல்லியில் சுமார் 90,000 ஆட்டோ ரிக்ஷாக்கள் இயங்கி வருகின்றன. கடந்த தேர்தலின் போது ஆம் ஆத்மி ஆட்டோ ரிக்ஷா கட்டணத்தை ஆட்சிக்கு வந்ததும் உயர்த்தி தரும் என்ற எதிர்பார்ப்பில், இத்துறையை சேர்ந்தவர்களும், தொழிற்சங்க உறுப்பினர்களும், அவர்களின் குடும்பங்களும் என பலரும் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.
ஆனால் ஆட்சிக்கு வந்ததும் ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவதில், கெஜ்ரிவால் அரசு மெத்தனமாக செயல்பட்டது. மேலும் ஆப்களின் மூலம் இயங்கி வரும் ஆட்டோக்களினால், சாதாரண ஆட்டோ தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் டெல்லியில் ஆட்டோக்களின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசு அமைத்த 11 உறுப்பினர் கொண்ட கட்டண நிர்ணயக்குழு, ஆட்டோ கட்டணத்தை 14 சதவீதம் வரை உயர்த்த பரிந்துரைத்தது. ஆனால் இந்த கட்டண உயர்வு போதாது என போர்க்கொடி தூக்கின ஆட்டோ தொழிற்சங்கங்கள். இதனையடுத்து ஆட்டோ ரிக்ஷா தொழிலாளர்களின் ஆதரவை இழக்க விரும்பாத ஆம் ஆத்மி, ஏற்கனவே உள்ள கட்டணத்திலிருந்து 18.75 சதவீதம் உயர்த்தி நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம்... தேடப்பட்ட 5 பேர் துபாயில் கைது
இதன்படி முதல் ஒன்றரை கிலோ மீட்டருக்கு குறைந்தபட்ச கட்டணமானது ரூ.25- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் இரண்டு கிலோ மீட்டருக்கான கட்டணமாக ரூ.25 இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே போல கிலோ மீட்டர் ஒன்றுக்கு ரூ.8- ஆக இருந்த கட்டணத்தை ரூ.9.50- ஆக உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தவிர புதிய வகை காத்திருப்பு கட்டணங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆட்டோக்கள் போக்குவரத்து சிக்னலில் சிக்கி கொண்டால், நிமிடம் ஒன்றுக்கு 0.75 பைசா கட்டணம் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. லக்கேஜ் கட்டணமாக ரூ.7.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோ கட்டணங்களை பொறுத்த வரை 2013-ம் ஆண்டிற்கு பிறகு தற்போது ஆம் ஆத்மி ஆட்சியில் தான் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், கடந்த முறை போல ஆட்டோ தொழிற்சங்கங்களின் ஆதரவை ஆம் ஆத்மி பெற்று ஆட்சியை தக்க வைக்குமா என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.