தேர்தல் முடிவு வந்த கையோடு இதைத்தான் செய்யனும்.. அகிலேஷும் ஆம் ஆத்மியும் பேசி எடுத்த முடிவு!
டெல்லி: தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் பாஜக ஆட்சியமைப்பதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என சமாஜ்வாதி கட்சியும் ஆம் ஆத்மியும் பேசி முடிவு எடுத்துள்ளன.
நாடாளுமன்றத்துக்கான 17 வது லோக்சபா தேர்தல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையடுத்து அன்றைய தினம் மாலையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின.
இதில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ஆதரவாகவே வந்துள்ளது. இதனால் பாஜக தலைவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
எதிர்க்கட்சிகள் திட்டம்
அதேநேரம் பாஜக ஆட்சியமைப்பதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக சந்திர பாபு நாயுடு, சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோர் பல்வேறு கட்சியின் தலைவர்களையும் சந்தித்து வருகின்றனர்.
எதிர்க்கட்சிகள் முடிவு
பாஜக அல்லாத கட்சியே மத்தியில் ஆள வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் குறியாக உள்ளன. இதற்காக கர்நாடகா பாணியில் அரசியல் செய்ய எதிர்க்கட்சிகள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அகிலேஷ்- சஞ்சய் சந்திப்பு
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அரசியல் கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் இன்று சந்தித்தார்.
என்ன செய்யவேண்டும்
அப்போது இருவரும், கருத்துக்கணிப்பு முடிவுகளை போல வாக்குப்பதிவு முடிவுகளும் ஒருவேலை பாஜகவுக்கு சாதகமாக வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தினர். தேர்தல் முடிவுக்கு பிறகு கையாள வேண்டிய யுத்திகள் குறித்தும் விவாதித்தனர்.
எக்ஸிட் போல்கள்
இந்த சந்திப்புக்கு பிறகு ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, தேர்தல் முடிவுக்கு பிறகு கையாள வேண்டிய யுத்திகள் குறித்து விவாதித்தோம். அப்போது எக்ஸிட் போல் முடிவுகள் குறித்தும் பேசினோம்.
பாஜகவை தடுக்க வேண்டும்
பாஜகவை ஆட்சியமைப்பதில் இருந்து தடுக்கவேண்டும் என்பதற்கே முன்னுரிமை அளித்துள்ளோம். உத்தரப்பிரதேசத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 60க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும்.
மத்தியில் வலுவான ஆட்சி
தேர்தல் முடிவுக்கு பிறகு பாஜக நாடு முழுவதும் இல்லாமலேயே போய்விடும். முன்பை போலவே கருத்துக்கணிப்புகள் பொய்தான் என இம்முறையும் நிரூபிக்கப்படும். எதிர்க்கட்சிகள் தான் மத்தியில் வலுவான ஆட்சியை அமைக்கும். இவ்வாறு ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் தெரிவித்தார்.