டெல்லி மாநகராட்சி இடைத் தேர்தல்.. பாஜகவுக்கு படுதோல்வி! மொத்தமாக அள்ளிய ஆம் ஆத்மி, காங்கிரஸ்
டெல்லி: டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் பாஜகவுக்கு படுதோல்வி பரிசாக கிடைத்துள்ளது. ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ளன.
வடக்கு டெல்லி மாநகராட்சியில் ரோஹினி-சி மற்றும் ஷாலிமார் பாக் (வடக்கு) ஆகிய இரண்டு வார்டுகளிலும், கிழக்கு டெல்லி மாநகராட்சியில் மூன்று வார்டுகளான திரிலோக்புரி, கல்யாணபுரி மற்றும் சவுகான் பேங்கர் ஆகியவற்றுக்கு பிப்ரவரி 28ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
ஷாலிமார் பாக் (வடக்கு) பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. திரிலோக்புரி மற்றும் கல்யாண்புரி ஆகியவை தனித் (எஸ்சி) தொகுதியாகும்.
100 நாட்களை எட்டும் டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. விரைவில் 12-ம் கட்ட பேச்சுவார்த்தை
இடைத் தேர்தல்கள்
ஐந்து வார்டுகளில், நான்கு வார்டுகளில் ஏற்கனவே ஆம் ஆத்மி கவுன்சிலர்கள்தான் பதவியில் இருந்தனர். ஆனால் டெல்லி சட்டசபை தேர்தலின்போது, அவர்கள் ஆம் ஆத்மி சார்பில் எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனவே அங்கு இடைத் தேர்தல்கள் நடைபெற்றன.
பாஜக வார்டு
ஷாலிமார் பாக் வார்டை பொறுத்தளவில் அங்கு, பாஜக கவுன்சிலர் திலக் ராஜ் கட்டாரியா கடந்த ஆண்டு ஜூன் மாதம் ராஜினாமா செய்தார். மேயர் பதவி பிரச்சினை காரணமாக தலைமையிடம் கோபித்துக் கொண்டு ராஜினாமா செய்துவிட்டார்.
பாஜகவுக்கு பின்னடைவு
இந்த நிலையில்தான், 4 வார்டுகளில் ஆம் ஆத்மியும், ஒரு வார்டில் காங்கிரசும் ஆரம்பம் முதல் முன்னிலையில் இருந்தது. காலை 10.30 மணியளவில் 2 வார்டுகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. 2 வார்டுகளில் முன்னிலை வகித்தபடி இருந்தது. பின்னர் 11 மணியளவில் மற்ற 2 வார்டுகளிலும் வென்றது.
காங்கிரஸ் வெற்றி
திரிலோக்புரி, கல்யாணபுரி, ரோஹினி-சி மற்றும் ஷாலிமார் பாக்கில் ஆம் ஆத்மியும், சவுகான் பேங்கரில் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளன. எங்குமே பாஜக வெற்றி பெறவில்லை. இது அந்த கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளளது.
டெல்லியில் தோல்வி
டெல்லியில் 272 வார்டுகள் உள்ளன. பாஜக 2012 முதல் மாநகராட்சியை கைப்பற்றி வருகிறது. ஆனால், மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தபோதிலும், டெல்லியில் தங்களது வார்டை கூட திரும்ப வெல்ல முடியவில்லை. சமீபத்தில் குஜராத் உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில் டெல்லி தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பாஜக மீது மக்கள் கோபமடைய காரணமாக இருந்திருக்கலாம், அது இந்த தேர்தலிலும் எதிரொலித்திருக்கலாம் என்கிறார்கள்.