அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கியதற்கு காரணமே.. இந்த பழைய சாதனம் தான்... அதிகாரி அதிர்ச்சி தகவல்
Recommended Video
டெல்லி: இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியற்கு காரணமே அவர் சென்ற போர் விமானத்தில் இருந்த பழைய தகவல் தொழில் தொடர்பு சாதனங்கள் தான் என விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி நடந்த தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.
இதனால் இந்திய ராணுவம் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைப்பகுதியான பால்கோட்டில் செயல்பட்ட, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் மீது கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தாக்குதல் நடத்தியது.
துரத்திய இந்திய விமானப்படை
இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான் ராணுவம் விமானப்படை விமானத்தை இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்த அனுப்பியது. இந்நிலையில் பாகிஸ்தானின் எப்-16 போர் விமானம் அத்துமீறி நுழைந்து இருப்பதை பார்த்த ,இந்திய விமானப்படை விமானங்கள் அதை விரட்டி சென்றன.
சுட்டு வீழ்த்தினார்
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வர்தமான், அமெரிக்க ரக போர் விமானமான எப்-16 விமானத்தை துர்த்திச் சென்று சுட்டு வீழ்த்தினார். அப்போது நடந்த சண்டையில் எதிர்பாராத விதமாக அபிநந்தன் சென்ற மிக்- 21 ரக விமானம் பாகிஸ்தானில் தவறி விழுந்தது. அதில் இருந்த அபிநந்தனும் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பின்னர் விடுவிக்கப்பட்டார்.
பழைய தகவல் சாதனங்கள்
இப்போது இந்திய அரசு அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. நாளை சுதந்திர தினத்தன்று விருது வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியதற்கு காரணம் அவர் சென்ற மிக்-21 ரக போர் விமானத்தில் இருந்த பழைய தகவல் தொடர்பு சாதனம் என்ற தகவலை விமானப்படை அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் துண்டித்துவிட்டது
இது குறித்து அந்த ஊடகத்துக்கு பெயர் சொல்ல விரும்பாத விமானப்படை அதிகாரி கூறுகையில், "இந்தியாவின் மிக்-21 ரக விமானத்தில் பழைய சாதன குறைப்பாடு மட்டும் இல்லை என்றால் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியிருக்க மாட்டார். பாகிஸ்தானின் எப்-16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தும் போது அபிநந்தன் சென்ற விமானத்தின் தகவல் தொடர்பை பாகிஸ்தான் ராணுவத்தினர் துண்டித்துவிட்டனர்.
இந்தியா திரும்பி இருப்பார்
இதனால் விமானத்தை வீழ்த்திய பிறகு, மீண்டும் இந்தியா திரும்புவது போன்ற எந்தக் கட்டளைகளும் இந்தியத் தரப்பிலிருந்து அபிநந்தனுக்கு வழங்கப்படவில்லை அதனால் அபிநந்தன் பாகிஸ்தான் பகுதியிலேயே சுற்றிக்கொண்டிருந்தார். இதன் காரணமாகவே அவர் சிக்கினார். அபிநந்தன் இருந்த மிக்-21 விமானத்தில் ஆன்டி ஜாமிங் (anti-jamming) இருந்திருந்தால் இந்திய அதிகாரிகளின் கட்டளைப்படி விமானத்தை வீழ்த்திய பிறகு, இந்தியா திரும்பியிருப்பார்" இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
கட்டளைகளை அளிக்கலாம்
விமானப்படை அதிகாரி சொல்லும் ஆன்டி ஜாமிங் சிஸ்டத்தை கடந்த 2005ம் ஆண்டு முதல் இந்திய விமானப்படையினர் கேட்டு வருகிறார்களாம். இதன் மூலம் எதிரி நாட்டுக்குள் செல்லும் விமானப்படை விமானங்களின் தகவல் தொடர்பு சாதனைகளை அந்த நாட்டால் துண்டிக்க முடியாது. தொடர்ந்து இந்திய அதிகாரிகளின் கட்டளைகளை கேட்க முடியும். மேலும் போர் நடக்கும் இடத்தில் எரிபொருள் மற்றும் வெடிபொருள் தொடர்பான முக்கிய விவரங்களை கேட்க முடியும். போர் நடக்கும் போது எதிரி நாட்டு எல்லைக்குள் சென்றாலும் மீண்டும் திரும்பிவிட முடியும். இந்த ஆன்டி ஜாமிங் தகவல் தொடர்பை இடைமறிக்கவோ தடுக்கவோ முடியாது என்கிறார்கள்.