அப்போ சிங்கம் ஹீரோ.. இப்போ அபிநந்தன்.. மீசையை வைத்து கெத்து பண்ணும் தமிழ்நாடு! காங்கிரசும் சப்போர்ட்
டெல்லி: விங் கமான்டர் அபிநந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் லோக்சபை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசை கேட்டுக் கொண்டதை அடுத்து தமிழக இளைஞரின் மீசை இனி தேசிய அளவில் பிரபலமாகும் என்பது பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புல்வாமாவில் தற்கொலை படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் படையை சேர்ந்த 40 பேர் பலியாகிவிட்டனர். இது உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அரசு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது வான் வழித் தாக்குதல் நடத்தியது. இதனால் பெரும் பதற்றம் நிலவியது.
விமானங்கள்
இந்திய- பாகிஸ்தான் வான் எல்லையில் விமான போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் பாகிஸ்தான் விமான படையினர் இந்தியா மீது தாக்குதல் நடத்த சென்ற போது அவர்களது விமானத்தை இந்திய மிக் ரக விமானங்கள் புறமுதுகிட்டு ஓட செய்தன.
பாகிஸ்தான் எல்லை
இந்த செயலின்போது இந்திய விமானத்தின் மீது பாகிஸ்தான் விமான படை துப்பாக்கியால் சுட்டது. அப்போது இந்திய விமான படையின் விங் கமான்டர் அபிநந்தன் விமானத்திலிருந்து பாராசூட் மூலம் கீழே குதித்தபோது பாகிஸ்தான் எல்லையில் விழுந்துவிட்டார்.
அழுத்தம்
அவரை பாகிஸ்தான் ராணுவம் சிறை பிடித்தது. பின்னர் ஒரு வாரத்துக்கு பிறகு இந்தியா, உலக நாடுகள் கொடுத்த அழுத்ததத்தின் பேரில் அவரை இந்திய அரசிடம் ஒப்படைத்தது.
தேசிய மீசை
இந்த நிலையில் அபிநந்தனின் வீரத்தை பாராட்டும் வகையில் அவரது மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கையை மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசை கேட்டுக் கொண்டார்.
பேசப்படும்
அபிநந்தனை சிறை பிடித்தவுடன் அவரது மீசைதான் மிகவும் பிரபலமாகவும் பேசும் பொருளாகவும் இருந்தது. அவர் சிங்கம் 2 படத்தில் சூர்யாவை வைத்திருந்ததை போல் அபிநந்தனும் மீசை வைத்திருக்கிறார். இதனால் சூர்யாவின் தைரியத்தையும் அபிநந்தனின் வீரத்தையும் தமிழர்கள் ஒப்பிட்டு மகிழ்ந்து கொண்டனர். இந்த படத்தில் சூர்யாவின் மீசையை பார்த்து சந்தானம் எர்றா (இறால்) மீசை என்றே அழைப்பார். இத்தகைய மீசை நேற்று தமிழகம் முழுவதும் பேசப்பட்டு வந்த நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. ஒரு வேளை தேசிய அங்கீகாரம் கிடைத்தால் அது இந்திய அளவில் பேசப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.