அதிக வெளிச்சம்.. அதிக சப்தம் உண்டாக்கும் அறையில் அபிநந்தன்.. 40 மணி நேர சித்திரவதை அனுபவிப்பு
டெல்லி: அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவத்தினர் 40 மணி நேரம் சித்திரவதை செய்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎஃப் படை வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
இதையடுத்து இந்திய விமான படையினர் பாகிஸ்தானில் வான் வழி தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தன. இந்த தாக்குதலை அடுத்த பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தன.
அபிநந்தன்
அப்போது மிக் ரக விமானங்கள் பாகிஸ்தான் விமானங்களை புறமுதுகிட்டு ஓடச் செய்தன. அப்போது விங் கமாண்டர் அபிநந்தனின் விமானத்தை பாகிஸ்தான் விமான படையினர் சுட்டனர். இதையடுத்து பாராசூட் மூலம் அபிநந்தன் கீழே குதித்தார்.
தகவல்கள்
இதில் துரதிருஷ்டவசமாக பாகிஸ்தான் எல்லையில் விழுந்த அபிநந்தனை அந்நாட்டு ராணுவத்தினர் சிறை பிடித்தனர். அவர் பாகிஸ்தான் பிடியில் இருந்த போது சித்திரவதையை அனுபவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
5 மணி நேரம்
அபிநந்தன் இஸ்லாமாபாத்தில் ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த போது எந்த சித்திரவதையையும் அனுபவிக்கவில்லை. ஆனால் இஸ்லாமாபாத்திலிருந்து 5 மணி நேரம் பயணம் தூர கொண்ட ராவல்பிண்டிக்கு அழைத்து சென்ற போது அங்கு பாகிஸ்தான் புலனாய்வு பிரிவினரால் சித்திரவதை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
சப்தம்
அவரை வெளிச்சம் அதிகமாக உள்ள அறையில் அடைத்து வைத்திருந்தனர். அத்துடன் காதுகளை பாதிக்கும் அளவுக்கும் தலைவலியை ஏற்படுத்தும் அளவுக்கு சப்தத்தையும் அங்கு உண்டாக்கியுள்ளனர். அத்துடன் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை அபிநந்தனை அதிகாரிகள் துன்புறுத்தியுள்ளனர். மொத்தம் 58 மணி நேரம் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த அபிநந்தனை 40 மணி நேரம் அதிகாரிகள் தொடர்ந்து துன்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ராணுவம்
அபிநந்தன் டீ குடிப்பது போன்று வெளியான புகைப்படம் அந்நாட்டு ராணுவத்தினரின் மெஸ்ஸில் எடுக்கப்பட்டது. அங்கிருந்த வரை அபிநந்தனுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது.