என்சிபி எம்எல்ஏக்களின் கையெழுத்து இருக்கு சரி.. அதில் பாஜகவுக்கு ஆதரவுனு எங்கேயாவது இருக்கா.. சிங்வி
டெல்லி: அஜித் பவார் வைத்துள்ள கடிதத்தில் 54 என்சிபி எம்எல்ஏக்களின் கையெழுத்து இருக்கிறது. ஆனால் அதில் ஒரு இடத்திலாவது அந்த 54 பேரும் பாஜக அரசு அமைய ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனரா என என்சிபி- காங்கிரஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கேள்வி எழுப்பினார்.
மகாராஷ்டிராவில் அவசர கோலத்தில் நிகழ்ந்த பதவியேற்பு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனு தாக்கல் செய்தது. அதில் காங்கிரஸும் என்சிபியும் இணைந்தது.
இந்த மனுவானது நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேவேந்திர பட்னவிஸ் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்த கடிதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வாதம் தொடங்கியது.
மகாராஷ்டிராவையடுத்து மத்திய பிரதேசத்தில் பரபர.. காங். முக்கிய தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கிளர்ச்சி?
என்சிபி எம்எல்ஏ
இந்த வழக்கில் என்சிபி- காங்கிரஸ் சார்பில் அபிஷேக் சிங்வி வாதம் செய்தார். அவர் முன் வைத்த வாதத்தில் ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட ஆதரவு கடிதத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களின் கையெழுத்து இருந்தது. ஆனால் அவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக ஒப்புதல் அளித்துள்ளார்களா? யாராவது ஒரு என்சிபி எம்எல்ஏவாவது அவ்வாறு கூறினரா?
கடிதம் அல்ல
எந்த கடிதத்திலாவது பாஜகவுடன் கூட்டணி என என்சிபி எம்எல்ஏக்கள் ஒருவராவது குறிப்பிட்டுள்ளனரா? இல்லையே!. பாஜக கூட்டணி நீதிமன்றத்தில் சமர்பித்த கடிதம் அக்கூட்டணிக்கு ஆதரவு அளித்து என்சிபி எம்எல்ஏக்கள் அளித்த கடிதம் அல்ல.
ஜனநாயக படுகொலை
அந்த கடிதம் 54 எம்எல்ஏக்களும் அஜித் பவாரை என்சிபி எம்எல்ஏக்களின் சட்டசபை குழுத் தலைவராக தேர்வு செய்தது தொடர்பானதாகும். 54 பேரும் மகாராஷ்டிராவில் புதிய அரசு உருவாக பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம் என குறிப்பிடவில்லை. எனவே மகாராஷ்டிராவில் நடந்தது ஜனநாயக படுகொலை.
சிங்வி
இது போல் எந்த விஷயங்களும் அஜித் பவார் கொடுத்த கடிதத்தில் குறிப்பிடாத போது தவறு என தெரிந்தும் ஆளுநரால் எப்படி அனைத்தையும் அலட்சியமாக கருத முடிந்தது? நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த காங்கிரஸ்- என்சிபி ஒப்புக் கொண்ட நிலையில் பாஜக மட்டும் அதை உடனடியாக நடத்தக் கூடாது என நினைப்பது ஏன் என அபிஷேக் மனு சிங்வி கேள்வி எழுப்பினார்.
பிரமாண பத்திரம் வாபஸ்
சிவசேனா- காங்- என்சிபி கூட்டணிக்கு ஆதரவு அளித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் பாஜகவுக்கு வழங்கப்படவில்லை என்பதால் அதைத் திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு சிங்விக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அந்த பிரமாண பத்திரங்களை அவர் திரும்ப பெற்றார்.