புகையிலை பழக்கத்தால் ஆண்டுக்கு இத்தனை லட்சம் பேர் மரணமா?... அதிர்ச்சி தகவல்
டெல்லி: புகையிலை பழக்கத்தால் ஆண்டுக்கு 80 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
புகை பிடிக்கும் பழக்கம் என்பது, இளைஞர்கள் மத்தியில் ஒருவித தொற்று நோய் போலவே பரவி வருகிறது. பள்ளிப்பருவத்திலேயே பலர் சிகரெட் பிடிக்க தொடங்கி விடுகிறார்கள். இப்படி மாணவ பருவத்திலேயே புகை பழக்கத்துக்கு அடிமையாகும் மாணவர்கள் அதில் இருந்து மீள முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
குட்கா, பான் மசாலா போன்ற பொருட்களுக்கான தடைச்சட்டம் போடப்பட்டிருக்கிறது. இருந்தும் அச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதால், முழுமையான தீர்வு ஏற்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
80 லட்சம் பேர் மரணம்
புகையிலை பழக்கம் கொண்டவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய், காசநோய், ஆஸ்துமா ஆகிய நோய்கள் உருவாவதாகவும், புகையிலை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதம் பேர், நுரையீரல் நோயால் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிலை பழக்கத்தால் ஆண்டுக்கு 80 லட்சம் பேர் மரணம் அடைவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆய்வுகள் நிரூபிக்கவில்லை
புகைப்பிடிக்கும் நபர்களுக்கு அருகே நிற்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ள உலக சுகாதார நிறுவனம், இதுபோன்றவர்களால் ஆண்டுக்கு 60 ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பதாக தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமானோர் புகையிலை பழக்கம் கொண்டுள்ளனர் என்றும், இ-சிகரெட் பாதுகாப்பானது என இதுவரை ஆய்வுகள் நிரூபிக்கவில்லை எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மரணம் அதிகம்
புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் உயிரிழப்பு, மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் வேகமாக உயருகின்றது. இந்தியாவில் 56.4 சதவிகித ஆண்களுக்கும், 44.9 சதவிகித பெண்களுக்கும் புகையிலை பழக்கத்தால் புற்று நோய் ஏற்பட்டிருக்கிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
நிகோடின் மாத்திரை
அதே நேரம், புகைப்பழக்கத்திலிருந்து விடுபட முடியாதவர்களுக்காக, தேவையான நிகோடினை மட்டும் பெற்றுக்கொள்ள நிகோடின் மாத்திரைகளும் சூயிங்கங்களும் விற்கப்பட்டு வருகின்றன. அவர்கள் இதனை மாற்றாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.
விழிப்புணர்வு வாசகங்கள்
புகையிலை பழக்கத்துக்கு எதிராகவும், மத்திய அரசு விழிப்புணர்வு பிரசாரங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. புகையிலை எதிர்ப்பு தினமும் ஆண்டு தோறும் கடை பிடிக்கப்படுகிறது. புகை பிடிப்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான புகைப்படங்களுடன் கூடிய விழிப்புணர்வு வாசகங்கள் சிகரெட் அட்டைப் பெட்டிகளில் இடம் பெற்று வருகிறது. 20 சதவிதம் அளவுக்கே இடம் பெற்று இருந்த, எச்சரிக்கை படங்களை 80 சதவீதம் அளவுக்கு மத்திய சுகாதார துறை அமைச்சகம் உயர்த்தியது. இருப்பினும், சொல்லும் படியான முன்னேற்றம் இல்லை மாறாக உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது.