ஏபிபி சர்வே.. உ.பியில் 51 இடங்களை அள்ளும் மாயா - அகிலேஷ் கூட்டணி.. பாஜகவிற்கு பின்னடைவு!
லோக் சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி 80ல் மொத்தம் 51 இடங்களை வெல்லும் என்று ஏபிபி - சி வோட்டர் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: லோக் சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி 80ல் மொத்தம் 51 இடங்களை வெல்லும் என்று ஏபிபி - சி வோட்டர் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக் சபா தேர்தல் விறுவிறுப்பு இப்போதான் தொடங்கி வருகிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் இப்போதே வெளி வர தொடங்கி இருக்கிறது. இந்த கணிப்புகள் பாஜகவின் 5 வருட ஆட்சி எப்படி இருந்தது என்று கணிக்க உதவுகிறது.
அந்த வகையில் தற்போது செய்தி நிறுவனமான ஏபிபி செய்தி சேனலும், சி வோட்டர் செய்தி சேனலும் சேர்ந்து தேர்தல் குறித்து நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. லோக் சபா தேர்தலில்உத்தர பிரதேசத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து கணிப்பு வெளியிட்டு இருக்கிறது.
என்ன முடிவு
ஏபிபி சி வோட்டர் சர்வேயின்படி உத்தர பிரதேசத்தை பொறுத்தவரை கிழக்கு உ.பியில் 21 லோக்சபா தொகுதிகளில் 15ஐ மாயாவதி கூட்டணி பெறும். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 6 தொகுதிகள் கிடைக்கும். கிழக்கு உ.பியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஒரு இடமும் கிடைக்காது.
பலம்
உ.பியின் அவாத் பகுதியில் மாயாவதி கூட்டணிக்கு 18ல் 13 தொகுதிகள் கிடைக்கும்.தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 3 இடங்கள் கிடைக்கும். காங்கிரஸுக்கு எந்த இடங்களும் கிடைக்காது.அவாத் பிராந்தியத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 2 இடம் கிடைக்கும். பண்டல்கந்த் பிராந்தியத்தில் மாயாவதி கூட்டணிக்கு 15ல் 8 இடம் கிடைக்கும்.
யாருக்கு வெற்றி
தேசிய ஜனநாயகக் கூட்டணி 6, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 1 இடம் கிடைக்கும். மொத்தமாக உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி - அகிலேஷ் கூட்டணி 80ல் 51 இடங்களை அள்ளும் என்று ஏபிபி சர்வேயில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் உத்தர பிரதேசத்தில் மாயாவதி - அகிலேஷ் கூட்டணிதான் வெற்றிக்கூட்டணி என்பது தெளிவாகிறது.
பாஜக மோசம்
மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 25 தொகுதிகள் கிடைக்கும். சென்ற முறை இந்த கூட்டணி 70க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்தது குறிப்பிடத்தக்கது. காங்கிரசின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு வெறும் 4 தொகுதிகளே கிடைக்கும் என்று ஏபிபி சர்வே குறிப்பிட்டுள்ளது.