லோக் சபா தேர்தலில் யாருக்கு வெற்றி.. ஏபிபி - சி வோட்டர் சர்வே முடிவு என்ன தெரியுமா?
டெல்லி: லோக் சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்று ஏபிபி - சி வோட்டர் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக் சபா தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு இந்தியா முழுக்க தேர்தல் ஜுரம் பிடித்து இருக்கிறது. தொடர்ந்து வரிசையாக நிறைய தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது செய்தி நிறுவனமான ஏபிபி செய்தி சேனலும், சி வோட்டர் செய்தி சேனலும் சேர்ந்து தேர்தல் குறித்து நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. லோக் சபா தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து கணிப்பு வெளியிட்டு இருக்கிறது.
ஏபிபி சி வோட்டர் சர்வேயின்படி லோக் சபா தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. 2019 லோக் சபா தேர்தலின் முடிவில் தொங்கு லோக் சபாவே உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது.
அதன்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 233 இடங்களில் வெற்றிபெறும். அதாவது மொத்தம் 33% இடங்களை பிடிக்கும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 167 இடங்களில் வெற்றிபெறும். அதாவது 32% இடங்களை பிடிக்கும்.
மற்ற மாநில கட்சிகள், சிறிய கட்சிகள் 143 இடங்களை பிடிக்கும். அதாவது 30% இடங்களை பிடிக்கும். லோக் சபாவில் மொத்தம் 543 உறுப்பினர்கள் தேவை. இதில் மெஜாரிட்டி பெற 272 உறுப்பினர்களின் பலம் தேவை.
அதனால், மாநில கட்சிகள், சிறிய கட்சிகளின் ஆதரவு யாருக்கோ அவர்களே 2019 தேர்தலுக்கு பின் ஆட்சி அமைக்க முடியும் என்று தேர்தல் கருத்து கணிப்பில் கூறப்பட்டு இருக்கிறது.