வங்கத்தில் மமதா.. பஞ்சாப்பில் காங்கிரஸ்.. பாஜகவிற்கு அடி கொடுக்கும் மாநிலங்கள்.. ஏபிபி சர்வே!
லோக் சபா தேர்தலில் மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவே மோசமாக தோல்வி அடையும் என்று ஏபிபி - சி வோட்டர் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: லோக் சபா தேர்தலில் மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவே மோசமாக தோல்வி அடையும் என்று ஏபிபி - சி வோட்டர் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக் சபா தேர்தல் கருத்து கணிப்புகள் தற்போது வெளியாகி வருகிறது.தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் இப்போதே வெளி வர தொடங்கி இருக்கிறது.
தற்போது செய்தி நிறுவனமான ஏபிபி செய்தி சேனலும், சி வோட்டர் செய்தி சேனலும் சேர்ந்து தேர்தல் குறித்து நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. மேற்கு வங்கம், பஞ்சாப், கோவா, வடகிழக்கு மாநிலங்களில் லோக் சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்க வெற்றி
மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி வெற்றிக் கொடி நாட்டுவார் என்று சர்வேயில் கூறப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 42 லோக்சபா தொகுதிகளில் 34ஐ மமதா கட்சி கைப்பற்றும் ஏபிபி கூறியுள்ளது. பாஜகவுக்கு 7 இடங்கள் கிடைக்கும். காங்கிரஸ் கட்சி இங்கு தனித்து போட்டியிட்டால் மோசமாக தோற்கும் என்று கூறப்பட்டுள்ளது.
வட கிழக்கு கதை
வட கிழக்கில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 14 தொகுதிகள் கிடைக்கும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 9 சீட், மற்றவர்களுக்கு 2 கிடைக்கும். எப்போதும் வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெல்லும். ஆனால் இப்போது பாஜக அதிக இடங்களில் வெல்ல போகிறது.
கோவா சர்வே
அதே சமயம் கோவாவில் மொத்தம் உள்ள 2 இடங்களில் பாஜக, காங். தலா ஒரு இடம் வெல்லும். கோவாவில் பாஜக நிறுத்தும் நபர்களை பொறுத்து தேர்தல் முடிவுகள் மாறுபடலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பஞ்சாப் நிலை
பஞ்சாபில் மொத்தம் உள்ள 13 தொகுதிகளில் 12ஐ காங்கிரசின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெல்லும். பஞ்சாப் மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒரு இடமே கிடைக்கும். பஞ்சாப்பில் இந்த முறையும் பாஜக சோபிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.