இந்தியா-பாகிஸ்தான் இடையே 3 மாதங்கள் ரகசிய பேச்சுவார்த்தை... உளவுப்பிரிவு வட்டாரங்கள் தகவல்!
டெல்லி: இந்தியாவும்-பாகிஸ்தானும் கடந்த 3 மாதங்களாக ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக உளவுப்பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தனி ஆலோசகர் முகமது யூசுப்புடன் இந்த பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளதாக அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு மட்டுமே இந்த ரகசிய பேச்சுவார்த்தை குறித்து தெரியும் என்றும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் அடாவடி
பாகிஸ்தான் எப்போது தனி நாடு ஆகியதோ அன்றில் இருந்தே இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் பாம்பும், கீரியுமாக உள்ளன. ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என அறிவிக்கப்பட்ட போதிலும், காஷ்மீரின் சில பகுதிகள் எங்களுக்கு சொந்தமானது என்று பாகிஸ்தான் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது. காஷ்மீரில் பிரினைவாத தலைவர்களை தூண்டி விட்டு, அங்குள்ள வாலிபர்களை வன்முறை பாதைக்கு இழுத்து விட்டு இந்தியாவுக்கு எதிராக ஆயுதமாக பயன்படுத்தியது பாகிஸ்தான்.
உறவை முறித்துக் கொண்ட இந்தியா
இதற்கு ஒரு முடிவு கட்ட ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை அதிரடியாக ரத்து செய்த மத்திய அரசு, அதனை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. ஆனாலும் தொடர்ந்து இந்திய எல்லையை சீண்டுவதில் பாகிஸ்தான் ராணுவத்தினர் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் புகுவதற்கு வசதியாக பயங்கரவாதிகளுக்கு உதவிகளை செய்து வருகிறது. மும்பை தாக்குதல், புல்வாமா, பதன்கோட் தாக்குதல் ஆகிய பெரும் பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்ட இந்தியா, பாகிஸ்தான் உறவை முழுமையாக முறித்துக் கொண்டுள்ளது.
ரகசிய பேச்சுவார்த்தை
இந்த நிலையில் இந்தியாவும்-பாகிஸ்தானும் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக உளவுப்பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தனி ஆலோசகர் முகமது யூசுப்புடன் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு மட்டுமே இந்த ரகசிய பேச்சுவார்த்தை குறித்து தெரியும் என்றும் உளவுபிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் பிரதமருக்கு அனுமதி இதனால்தான்
இந்த பேச்சுவார்த்தையின் நல்ல விளைவுகள் தற்போதே தெரிய வந்துள்ளதாகவும், வரவிருக்கும் வாரங்களில் இரு நாடுகளும் சமாதானத்தை நோக்கி முன்னேறி வரக்கூடும் என்றும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கை செல்வதற்கு இந்தியா தனது வான்வெளியை பயன்படுத்த அனுமதி அளித்தது, எல்லைக் கட்டுப்பாட்டுப் கோடு பகுதியில் போர் நிறுத்த உடன்படிக்கைகளை கடைப்பிடிப்பதாக இரு நாட்டு அதிகாரிகளும் ஒத்துக் கொண்டது ஆகியவை இந்த பேச்சுவார்த்தையின் மூலமாகவே பிறந்தது என்று உளவுப்பிரிவு வட்டாரங்கள் கூறுகின்றன.
இரு நாட்டு அதிகாரிகள் சொல்வது என்ன?
ஆனால் இம்ரான் கானின் தனி ஆலோசகர் முகமது யூசுப், அஜித் தோவலுடனான பேச்சுவார்த்தையை மறுத்துள்ளார். தங்கள் இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் இது அடிப்படை ஆதாரமற்ற தகவல் என்றும் அவர் டுவிட் செய்துள்ளார். இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், இந்தியா பாகிஸ்தானுடனான இயல்பான, அண்டை உறவுகளை விரும்புகிறது. அமைதியாக இருதரப்பு முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். முக்கிய விஷயங்களில், எங்கள் நிலைப்பாடு மாறாமல் உள்ளது. நான் அதை மீண்டும் வலியுறுத்த தேவையில்லை என்று கூறியுள்ளார். எது எப்படியோ இந்தியாவும், பாகிஸ்தானும் சண்டைகளை மூட்டை கட்டி விட்டு ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என்பதே இரு நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.