போக்சோவில் வருகிறது அதிரடி மாற்றம்.! குழந்தைகளிடம் வேலையை காட்டும் காமுகர்களுக்கு தூக்கு
டெல்லி: சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றத்தடுப்பு சட்டத்தை திருத்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. போக்ஸோ சட்டம் 2012 பிரிவுகளில், கீழ் தற்போது சட்டதிருத்தங்கள் மேற்கொள்ள ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
18 வயதுக்கு குறைவான அனைத்து சிறுவர் மற்றும் சிறுமியர்களை பாலியல் துன்புறுத்தலில் இருந்து காக்க கொண்டு வரப்பட்ட சட்டமே போக்சோ. குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் 2012-ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதான வழக்கை 3 மாதங்களுக்குள் முடித்து தண்டனை வழங்க வேண்டும்.
குழந்தைகளுக்கு எதிராக இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் தொடர்பான வழக்கை வெளிப்படையாக விசாரிக்க தேவையில்லை உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன. இந்நிலையில் இந்த போக்சோ சட்டத்தில் அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது
இதற்கு வசதியாக போக்சோ சட்டத்தில் மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டப்பிரிவை சேர்க்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் சிறுவர் சிறுமியருக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில், தூக்கு தண்டனை வரை அளிக்க இந்த மசோதா வழி செய்யும்.
மேலும் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் தயாரிப்பது, வெளியிடுவது, அதனை வைத்து வர்த்தக நோக்கில் செயல்படுவது உள்ளிட்ட குற்றங்களுக்கும் கடும் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க இந்த சட்ட மசோதா வழி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது
இதே போல திருநங்கைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சட்டதிருத்த மசோதாவிற்கும், மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இரு மசோதாக்களும் இந்த கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இவை தவிர நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒரே நாடு, ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் முடிவு மற்றும் கிராமப்புற சாலைகளை மேம்படுத்தும் வகையில் பிரதம மந்திரி கிராம் சகத் யோஜனா திட்டப்படி 1 லட்சத்து 25 கி.மீ தூரத்திற்கு சாலை அமைப்பது உள்ளிட்டவற்றிற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.