சி.ஏ.ஏ. போராட்டம்- ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவி சபூரா சர்காருக்கு ஜாமீன்
டெல்லி: சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தின் போது டெல்லியில் வன்முறைகள் வெடித்தது தொடர்பாக ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாணவி சபூரா சர்காருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. பல மாதங்களாக நடைபெற்ற இந்த போராட்டங்கள் கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டன.
இப்போராட்டங்களின் போது கடந்த பிப்ரவரியில் டெல்லியில் வன்முறை வெடித்தது. இம்மோதல் தொடர்பாக டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழக மாணவி சபூரா சர்கார் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது ஊபா எனப்படும் சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை சட்டமும் பாய்ந்தது. 6 மாத கர்ப்பிணியாக இருந்த மாணவி சபூரா சர்கார் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது ஜாமீன் மனு பல முறை நிராகரிக்கப்பட்டது.
வாரிசு அரசியல் நடத்தினா கட்சிக்கு வாய்க்கரிசிதான்- நிதிஷின் ஜேடியூவில் ஐக்கியமான ஆர்ஜேடி எம்எல்சிகள்
இது பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது. இந்த நிலையில் சபூரா சர்காருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இன்று நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அரசின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்; விசாரணை அதிகாரியுடன் போனில் தொடர்பில் இருக்க வேண்டும்; டெல்லியை விட்டு வெளியேறக் கூடாது ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.