செங்கோட்டை வன்முறை.. நடிகர் தீப் சித்து மீது எப்.ஐ.ஆர்.. டெல்லி போலீஸ் நடவடிக்கை
டெல்லி: செங்கோட்டை வன்முறை தொடர்பாக போலீஸ் பதிவு செய்த எப்.ஐ.ஆரில் பாஜக ஆதரவாளரான, நடிகர் தீப் சித்து பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
ஜனவரி 26ம் தேதி டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் டிராக்டர் பேரணியின்போது செங்கோட்டையை முற்றுகையிட்டு சிலர் விவசாய கொடியேற்றினர். அது காலிஸ்தான் கொடி என்று பாஜக ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர்.
ஆனால் இந்த கலவர பின்னணியில் பாஜக ஆதரவாளரான நடிகர் தீப் சித்து இருப்பதாக விவசாய சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன.
இந்த நிலையில்தான் தீப் சித்து பெயர் கோட்வாலி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் இடம் பிடித்துள்ளது. ரவுடியாக இருந்து 'சமூக சேவகராக' மாறிய லகா சித்தனா பெயரும் எப்ஐஆரில் உள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ் டெல்லி காவல்துறை வடக்கு மாவட்டத்தின் கோட்வாலி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது.
பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம் மற்றும் ஆயுதச் சட்டம் ஆகியவை எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஐபிசி பிரிவுகள் 186 (பொது ஊழியர்களை பணியாற்றவிடாமல் தடுப்பது), 353 (அரசு ஊழியரை தாக்குதல்), 308 (அரசு ஊழியரை பணியாற்ற விடாமல் தாக்கி கொலை செய்ய முயற்சித்தல்), 152 (பொதுமக்களைத் தாக்குவது) 397 (கொள்ளை, அல்லது கொடுமை, மரணம் அல்லது கடுமையான காயத்தை ஏற்படுத்தும் முயற்சி), மற்றும் 307 (கொலை முயற்சி) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.