நடிகர்கள் சூர்யாவையும் ரஜினியையும் மிரட்டுறாங்க.. லோக்சபாவில் வெங்கடேசன் எம்பி பரபரப்பு பேச்சு
டெல்லி: புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து தெரிவித்த சூர்யா மற்றும் அவருக்கு ஆதரவு தெரிவித்த ரஜினி காந்த் ஆகியோர் மிரட்டப்படுவதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் லோக்சபாவில் இன்று பேசியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
புதிய கல்லி கொள்கைக்கு எதிராக 10 கேள்விகளை எழுப்பி நடிகர் சூர்யா பேசியிருப்பது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுவரை புதிய கல்வி கொள்கை குறித்து எந்த புரிதலும், விழிப்புணர்வும் இல்லாமல் இருந்த பலர் அதன் மீது கவனம் செலுத்தினார். இதனால் புதிய கல்வி கொள்கை குறித்து மத்திய அரசுக்கு பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் புதிய கல்லி கொள்கைக்கு எதிராக பேசிய நடிகர் சூர்யாவுக்கு, நடிகர் ரஜினி காந்த் ஆதரவு தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக பாஜக தலைவர்கள் இருவருக்கும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், லோக்சபாவில் நடிகர் சூர்யா கருத்துக்கு ஆதரவாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் இன்று (வியாழக்கிழமை) பேசினார். அப்போது அவர், "புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்த சூர்யா மற்றும் அவருக்கு ஆதரவு தெரிவித்த ரஜினி காந்த் ஆகியோர் மிரட்டப்படுகிறார்கள்.
புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து கூறலாம் என அரசு சொல்லிய நிலையில் நடிகர் சூர்யா கருத்து கூறியதற்கு பாஜக தலைவர்கள் கண்டனங்கள் தெரிவிப்பது ஏன்? புதிய கல்விக்கொள்கை மீது கருத்து கூற வேண்டுமா, அல்லது ஆதரவு தெரிவிக்க வேண்டுமா?" என கேள்வி எழுப்பினார்.