காந்தி குடும்பத்தைச் சேராத யார் தலைவரானாலும்.. காங்கிரஸ் உருப்படாது.. அதிர் ரஞ்சன் அதிரடி
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் காந்தி குடும்பத்தைச் சேராத யார் வந்தாலும் இழந்த பெருமையையும், பலத்தையும் திரும்பப் பெற முடியாது. இதுதான் எதார்த்தம் என்று லோக்சபா காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் செளத்ரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு 23 தலைவர்கள் இணைந்து கடிதம் எழுதியிருப்பதால் கட்சிக்கு எந்த பயனும் கிடைக்காது. மாறாகத பாஜகதான் இதில் அரசியல் செய்து லாபம் அடையும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
காங்கிரஸ் உட்கட்சி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இடைக்காலத் தலைவர் பதவியிலிருந்து விலக சோனியா காந்தி விருப்பம் தெரிவித்துள்ளார். இன்று காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் கூடி இதுதொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளது. இந்த நிலையில் அதிர் ரஞ்சன் செளத்ரி, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் வரலாற்றில் காந்தி குடும்பத்தைச் சேராத பலர் தலைவர்களாக பதவி வகித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியும் அதை எப்போதும் ஊக்குவித்தே வந்துள்ளது. பி.வி.நரசிம்மராவ், சீதாராம் கேசரி போன்றோரை உதாரணங்களாக காட்டலாம். ஆனால் நிதர்சனம் என்னவென்றால், காந்தி குடும்பத்தைச் சேராதவர்கள் கட்சி பலமடைந்ததில்லை. பெரிதாக எதையும் அவர்கள் சாதித்ததும் இல்லை. நரசிம்மராவுக்குப் பிறகு, சோனியா காந்தி தலைவராகும் வரை காங்கிரஸால் எதையும் சாதிக்க முடியவில்லை என்பதை அனைவரும் அறிவோம். இதுதான் எதார்த்தம். இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் தலைமைக்கு 23 தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அதிகுறித்து நான் கருத்து தெரிவிக்க இயலாது. ஆனால் இது தவறான அணுகுமுறை என்று மட்டும் என்னால் சொல்ல முடியும். இந்தக் கடிதம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் கட்சிக்கு எந்த லாபமும் இல்லை. மாறாக பாஜகதான் இதை வைத்து அரசியல் செய்து லாபம் அடையும். இப்படிச் செய்ததன் மூலம் பாஜகவுக்குத்தான் லாபம் கொடுத்துள்ளனர் இந்த தலைவர்கள். அவர்கள் வாய்க்கு மேலும் தீனி போட்டுள்ளனர்.
ராகுல் "ராஜீவாக" முயற்சித்தது போதும்.. இனி பிரியங்கா ஏன் "இந்திரா" ஆக கூடாது... பரபரக்கும் காங்கிரஸ்
சோனியா காந்தி மிகவும் திறமையானவர். அவரால்தான் கட்சியை திறம்பட வழி நடத்த முடியும். தேசிய அளவில் பாஜகவுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்கக் கூடிய அளவுக்கு காங்கிரஸை வழி நடத்த அவரால் மட்டுமே முடியும். கட்சியின் தலைவர்களான இவர்களது கவலைகள் குறித்து நான் கருத்துக் கூற முடியாது. தலைவர்கள் என்ற அந்தஸ்தில் இவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். ஆனால் அனைவருமே சீனியர் தலைவர்கள். கட்சிக்கு பெருமளவில் பங்காற்றியவர்கள். சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்கள். எளிதாக அவர்களைத் தொடர்பு கொள்ளக் கூடிய நிலையில் உள்ளவர்கள். அப்படிப்பட்டவர்கள் ஏன் கடிதம் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும். .நேரடியாகவே பேச முடியுமே. அதைச் செய்திருக்கலாமே.. ஏன் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்போது அதைப் பற்றிப் பேசியிருக்கலாமே.
Recommended Video
நிச்சயம் இவர்களின் கருத்துக்களை சோனியா காந்தி புறக்கணிக்கப் போவதில்லை. நிச்சயம் விவாதிப்பார். கண்டிப்பாக காது கொடுத்துக் கேட்பார். தேவையானால் விரிவான விவாதத்தையும் அவர் அனுமதித்திருப்பார். அப்படி இருக்கும் பட்சத்தில் இந்தக் கடிதம் தேவையற்றது. இது கட்சிக்கு உதவாது என்று கூறியுள்ளார் அதிர் ரஞ்சன் செளத்ரி.