ஆதிர் ரஞ்சன் சவுத்திரி.. யாருன்னே தெரியலையே.. சவாலா இருப்பாரா?
டெல்லி: லோக்சபா காங்கிரஸ் தலைவராக மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சித் தலைமை மூன்று பேரின் பெயர்களை தீவிரமாக பரிசீலித்து வந்த நிலையில் மேற்குவங்க மாநில எம்.பி.யும், மூத்த தலைவருமான ஆதிர் ரஞ்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
17 வது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரண்டாவது தடவையாக படு தோல்வி அடைந்தது. இம்முறையும் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கவில்லை. கடந்த முறை 44 எம்.பி.க்களை பெற்ற அக்கட்சி இம்முறை 52 எம்.பிக்களை பெற்றுள்ளது. இதற்கு பொறுப்பேற்று ராகுல் ராஜினாமா செய்தார். ஆனால், அவரது ராஜினாமாவை காங்கிரஸ் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் காரியக் கமிட்டியும் ஏற்க மறுத்து விட்டது.
அவரை சமாதானம் செய்ய தொடர்ந்து முயற்சிகள் நடந்து வருகிறது. அதோடு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவராக ராகுலே பொறுப்பேற்க வேண்டும் என்றும் மூத்த தலைவர்கள் கோரி வந்தனர். ஆனால் காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் பதவிக்கு மீண்டும் சோனியா காந்தியே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த லோக்சபாவில், காங்கிரஸ் குழுவின் தலைவராக இருந்த மல்லிகார்ஜூன கார்கே இந்தமுறை அவர் தோல்வியடைந்து விட்டதால், இந்த பதவிக்கு கேரள மாநிலத்தில் இருந்து 7 முறை காங்கிரஸ் சார்பில் தேர்வு செய்யப்பட்ட கொடிக்குன்னில் சுரேஷ், மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து 5 முறை காங்கிரஸ் சார்பில் எம்.பி.யான ஆதிர் ரஞ்சன் சவுத்திரி, திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தது.
மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு
சிபிஐ இயக்குநர், ஊழல் கண்காணிப்பு ஆணைய தலைவர் தேர்வு போன்றவற்றில் மக்களவை காங்கிரஸ் தலைவரின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஆகவே மக்களவை காங்கிரஸ் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே அனுபவம் வாய்ந்த ஒருவரை தேர்வு செய்ய விரும்பிய காங்கிரஸ் தலைமை கொடிக்குன்னில் சுரேஷ், ஆதிர் ரஞ்சன் சவுத்திரி, சசிதரூர் ஆகியோரை தீவிரமாக பரிசீலித்து அதில் இறுதியாக லோக்சபா காங்கிரஸ் கட்சித் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்திரியை தேர்வு செய்தது.
லோக்சபா தலைவரை தேர்வு செய்ய காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம் சோனியா காந்தியின் இல்லத்தில் இன்று நடைபெற்றது. இதில், ஏ.கே.அந்தோணி, ஜெய்ராம் ரமேஷ், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் மக்களவை எம்.பி.,க்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்திரி தேர்வு செய்யப்பட்டார். மக்களவைத் தலைவர் தேர்வு மட்டுமின்றி ஒரே நாடு; ஒரே தேர்தல் என்ற மத்திய அரசு முன் வைக்கும் திட்டம் தொடர்பாகவும் இன்றையக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆதிர் ரஞ்சன் சவுத்திரி யார் என்றே தெரியாத நிலைதான் உள்ளது. அதிகம் அறியப்படாத ஒருவரை வலுவான பாஜகவை எதிர்த்து தலைவராக காங்கிரஸ் நிறுத்தியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கடந்த லோக்சபாவில் மல்லிகார்ஜூன கார்கே தலைவராக இருந்தார். அப்போது அவர் சிறப்பாக வாதாடினார் என்பது நினைவிருக்கலாம். ஒருவேளை சவுத்திரியும் அதுபோல முழங்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.