மோடி கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. டெல்லி சென்றும் பங்கேற்காத சிவி சண்முகம்.. காரணம் என்ன?
Recommended Video
டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில் பெரும் திருப்புமுனையாக அதிமுக சார்பில் அக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற சட்டத் துறை அமைச்சர் சிவி சண்முகம் கலந்து கொள்ளவில்லை, அவர் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார் என தெரிகிறது.
நாடாளுமன்றத்துக்கும் அனைத்து மாநிலங்களின் சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. இதற்கு பலர் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
இது போல் ஒரே நேரத்தில் இரு தேர்தல்களும் நடத்தப்பட்டால் பண விரயம் தவிர்க்கப்படும் உள்ளிட்ட காரணங்களை மத்திய அரசு கூறுகிறது. ஆனால் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
அரசியலமைப்புக்கு எதிரானது
இது போல் ஒரே நேரத்தில் இரு தேர்தல்களும் நடந்தால் நாட்டின் கூட்டாட்சி முறையைச் சிதைக்கும் முறையில் உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன.
தேசியவாத காங்கிரஸ் கட்சி
இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி , மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜம்மு- காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
அதிமுக பங்கேற்கவில்லை
இந்த கூட்டத்தில் அமைச்சர் சிவி சண்முகமும், மாநிலங்களவை எம்பி நவநீதகிருஷ்ணனும் கலந்து கொள்வதாக சொல்லப்பட்டது. இதற்காக சிவி சண்முகமும் இன்று காலை புறப்பட்டு டெல்லி சென்றார். ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை.
கலந்து கொள்ளவில்லை
கட்சியின் முக்கிய பிரதிநிதிகள், மாநில முதல்வர்கள் கலந்து கொண்டுள்ள இந்த கூட்டத்தில் கட்சியின் தலைமைக்கு பதில் நிர்வாகிகள் பங்கேற்க முடியுமா என்ற குழப்பம் ஏற்பட்டதால் அவர் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
பங்கேற்கவில்லை
இதையடுத்து அவர் டெல்லிக்கு போயும் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் சென்னைக்கு கிளம்பி வந்து கொண்டிருக்கிறார். அதுபோல் திமுக, தெலுங்கு தேசம், காங்கிரஸ் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தமிழகத்திலிருந்து அக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஒரே கட்சி அதிமுக என்றிருந்த நிலையில் தற்போது அதுவும் இல்லை என்றாகிவிட்டது.