முத்தலாக் மசோதா.. லோக்சபாவில் முன்பு எதிர்ப்பு.. இப்போது அதிமுக ஆதரவு
டெல்லி: முத்தலாக் மசோதாவுக்கு லோக்சபாவில் அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
முஸ்லிம் சமூகத்தில் மனைவியுடனான இல்லற வாழ்வை முறித்து கொள்ள கணவன்மார்கள் பயன்படுத்தும் வார்த்தையே முத்தலாக் ஆகும். ஆனால் இது கால போக்கில் பெண்களுக்கு பாதுகாப்பின்மையை ஏற்படுத்தி வந்தது.
முத்தலாக் சட்டத்தை ஆண்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். இதனால் ஏராளமான பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது. இது தொடர்பாக முஸ்லிம் பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டியது. கடந்த கூட்டத் தொடர்களில் இந்த மசோதாவை கொண்டு வந்த போது அதிமுகவின் எம்பியாக இருந்த அன்வர் ராஜா உள்ளிட்டோர் எதிர்த்தனர்.
இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இன்று எப்படியாவது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டது. இந்த நிலையில் மக்களவையில் இதன் மீதான விவாதம் நடத்தப்பட்டது.
அப்போது அதிமுக ஆதரவு அளித்தது. அதாவது அதிமுகவின் எம்பியான ஓ.பி. ரவீந்திரநாத் குமார் கூறுகையில் பெண்களின் உரிமையை பாதுகாக்கும் நடவடிக்கை இது என தெரிவித்தார். முத்தலாக் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் வெளிநடப்பு செய்தது.