சமஸ்கிருதத்தை கற்பிக்க 5 கிராமங்கள் தத்தெடுப்பு .. மத்திய அரசின் உத்தரவையடுத்து நடவடிக்கை
டெல்லி: நாட்டில் சமஸ்கிருதம் பேசும் கிராமங்களை உருவாக்குவதில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் முனைப்பு காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சமஸ்கிருதத்தை கற்பிக்க கிராமங்களை தத்தெடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை ஏற்று ராஷ்டிரிய சமஸ்கிருத சமஸ்தான் கல்வி நிறுவனம் சார்பாக 5 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டுள்ளன.
சமஸ்கிருதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் 3 மத்திய நிறுவனங்களில் ஒன்றான ராஷ்டிரிய சமஸ்கிருத சமஸ்தான், நாடு முழுவதுமிலிருந்து 5 கிராமங்களை தத்தெடுத்துள்ளது. சமஸ்கிருத மொழியை நன்கு கற்று சரளமாக உரையாடும் வகையில், மக்களை தயார்படுத்த வேண்டும் என்ற மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவின் அடிப்படையில் 5 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டுள்ளன
கடந்த மாதம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், சமஸ்கிருத மொழியை பாதுகாக்கும் வகையில் மத்திய சமஸ்கிருத கல்வி நிறுவனங்களுக்கு அருகில் குறைந்தது 2 சமஸ்கிருத மொழி பேசும் கிராமங்களை உருவாக்க வலியுறுத்தினார்.
ராஷ்டிரிய சமஸ்கிருத சமஸ்தான், டெல்லியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யபீதா மற்றும் திருப்பதியில் உள்ள ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யபீதா ஆகியவை சமஸ்கிருத மொழியை ஊக்குவிக்கும் மத்திய நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சமஸ்கிருதத்தை மக்கள் சரளமாக பேசும் மொழியாக மாற்றுவதற்காக, கிராமங்களை தத்தெடுத்து சமஸ்கிருத மொழியைக் கற்பிக்க மேற்கண்ட நிறுவனங்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து திரிபுராவில் ஜுபார்டா, இமாச்சல பிரதேசத்தில் மசோட், கர்நாடகா மாநிலத்திலுள்ள சிட்டெபெயில், கேரளாவிலுள்ள அடாட் மற்றும் மத்திய பிரதேசத்திலுள்ள பராய் உள்ளிட்ட5 கிராமங்களை ராஷ்டிரிய சமஸ்கிருத சமஸ்தான் தத்தெடுத்து கொண்டுள்ளது,
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள மனிதவள மேம்பாட்டு அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் 3,500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த சமஸ்கிருத மொழியில் மக்கள் சரளமாக உரையாடவே இந்த நடவடிக்கை என்றார்.
தத்தெடுக்கப்பட்டுள்ள 5 கிராமங்களில் உள்ள அனைவரும் சமஸ்கிருத்தில் உரையாடும் வகையில் அம்மொழி கற்பிக்கப்படும். மற்ற 2 நிறுவனங்களும் விரைவில் கிராமங்களை தத்தெடுக்கும் என தகவல் தெரிவித்தார்.