அயோத்தி ராமர் கோவில்.. பூமி பூஜை.. அத்வானிக்கே அழைப்பு இல்லையாம்.. ஷாக்கில் தொண்டர்கள்!
டெல்லி: அயோத்தி என்றாலே நினைவுக்கு வருபவர் பாஜக மூத்த தலைவர் அத்வானி. அயோத்தியில் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடக்கும் ராமர் கோயில் பூஜைக்கு அத்வானி அழைக்கப்படுவாரா மாட்டாரா என்ற ஊகங்கள் எழுந்த நிலையில் கட்டாயமாக அழைக்கப்படுவார் என்ற செய்தி மட்டும் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை அதிகாரபூர்வ அழைப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவுக்கு சிறிய அளவில் மட்டும் அழைப்பாளர்கள் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. காரணம் கொரோனா தொற்று பரவல், அயோத்தி கோயிலிலும் அர்ச்சகர், போலீசார் உள்பட 18 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கிடையிலும் அடிக்கல் நாட்டுக்கான சிறப்பு ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது.
அயோத்தி ராமர் கோவில்.. எதிர்பார்த்ததை விட வேற லெவலில் இருக்கும்.. விவரிக்கும் கட்டடக் கலைஞர்கள்!
தொலைபேசி அழைப்பு
இந்த விழாவுக்கு பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி அழைக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதில் அளித்து இருக்கும் பெயர் வெளியிட விரும்பாத கோயில் டிரஸ்ட் உறுப்பினர் ஒருவர், கண்டிப்பாக அழைக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள் இருவருக்கும் இதுவரை எந்தவித அழைப்பும் போகவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. இவர்கள் இருவருக்கும், மற்றவர்களுக்கும் தொலைபேசி வழியாக அழைப்பு விடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா டிரஸ்ட் பொதுச் செயலாளர் சம்பத் ராய் அழைப்பிதழ் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி இருவரும் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கலந்து கொள்வார்கள் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
உமா பாரதி
இதுகுறித்து செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் உமா பாரதி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் இருவரும், ''பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் தங்களுக்கு தற்போது கூட எந்த வருத்தமும் இல்லை என்று தெரிவித்து இருந்தனர். மேலும், ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள தங்களுக்கு அழைப்பிதழ் வந்து இருப்பதாகவும், பிரதமருடன் விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆயிரம் கேள்விகள்
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானியும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். சிபிஐ இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. கடந்த வாரம் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வீடியோ வாயிலாக விசாரணை மேற்கொண்டது. இதில் அத்வானி பங்கேற்று சுமார் நான்கரை மணி நேரம் கலந்து கொண்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுத்துள்ளார்.
பெரிய விஷயம் இல்லை
இதேபோல் முரளி மனோகர் ஜோஷியும் தனது பதிலை பதிவு செய்தார். அப்போது, தன் மீதான வழக்குகள் வேண்டும் என்றே அரசியல் காரணங்களுக்காக போடப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரம் இல்லாதவை என்று தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய வழக்கில் தீர்ப்பு தனக்கு பெரிய விஷயமே இல்லை என்று மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வரும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இருக்கும் உமா பாரதி தெரிவித்துள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று அத்வானி 1990ல் ரத யாத்திரை மேற்கொண்டு இருந்தார். இவர்தான் கோயில் கட்டுவதற்கு பிள்ளையார் சுழி போட்டார் என்றும் கூறலாம். ரத யாத்திரை முடிந்த தருவாயில்தான், அயோத்தியில் 1992ல், டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. மசூதி அருகே மேடை அமைத்து அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங் ஆகியோர் ஆத்திரமூட்டும் வகையில் பேசியதால், கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாபர் மசூதியை இடித்ததாக கூறப்பட்டது.
சிவசேனா
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு இன்னும் அழைப்பிதழ் வரவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பின்னர் அயோத்திக்கு சென்று வந்தார் உத்தவ். அயோத்தியில் ராமர் கோயில் எழுப்புவதற்கு சிவசேனாவும் ரத்தம் சிந்தி இருக்கிறது என்று அந்தக் கட்சியினர் கூறி வருகின்றனர்.
Recommended Video
2.77 ஏக்கரில் கோயில்
அடிக்கல் நாட்டு விழாவுக்கு 50 பேர் மட்டுமே அழைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. அடிக்கல் நாட்டு விழாவின்போது, 40 கிலோ வெள்ளி செங்கற்கள் அஸ்திவாரமாக வைக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2.77 ஏக்கரில் கோயில் அமைகிறது.