விகாஸ் துபே கொல்லப்படலாம்.. அப்பவே சந்தேகப்பட்ட வக்கீல்.. செய்து காட்டிய உ.பி.போலீஸ்!
டெல்லி: உத்தரப்பிரதேசத்தின் பிரபல தாதா போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படலாம் என்று வியாழக்கிழமை மாலையே வழக்கறிஞர் கன்ஷியாம் உபத்யாய் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுத்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை மத்தியப்பிரதேசத்தில் இருந்து கான்பூர் அழைத்து வரும் வழியில் போலீசாரின் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயன்றதால் விகாஸ் துபேவை சுட்டுக் கொன்றதாக உத்தரப்பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக நேற்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுத்து இருந்த வழக்கறிஞர் கன்ஷியாம் உபத்யாய் தனது மனுவில், ''உத்தரப்பிரதேச போலீசாரால் எவ்வாறு விகாஸ் துபேவின் ஆட்கள் என்கவுன்டரில் கொல்லப்பட்டனரோ அதேபோல், விகாஸ் துபேவும் கொல்லப்படலாம்.
எவ்வாறு கூட்டாளிகள் கொல்லப்பட்டனரோ அதேபோல் விகாஸும் கொல்லப்படலாம். நான் இவ்வாறு கூறுவதால், விகாஸ் துபே மீது எனக்கு பரிதாபம் இருக்கிறது என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். இந்த நாட்டில் அப்சல் குரு, அஜ்மல் கசாப் இருவரின் வழக்குகள் கூட முறையாக நடத்தப்பட்டு, தண்டிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச போலீசார் சட்டத்தை தங்களது கையில் எடுத்துக் கொண்டு அவர்களே முன் வந்து விகாஸ் துபேவை என்கவுன்டரில் கொன்றுவிட முடியாது. உபி போலீசாருக்கு அசுரன் போன்றவர் விகாஸ் துபே.
விகாஸ் துபே மீது இதுவரை 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஒன்றில் கூட போலீசார் நேர்மையாக செயல்பட்டு தண்டனை வாங்கித்தராத காரணத்தினால், இதுவரையும் விகாஸ் துபே வெளியே சுதந்திரமாக சுற்றிக் கொண்டு இருந்தார். அரசியல்வாதிகள், போலீசாருடன் விகாஸ் துபேவுக்கு இருக்கும் தொடர்பை நேர்மையான முறையில் விசாரிக்க வேண்டும். சட்டத்தை சீர்குலைக்கும் வகையில் உபி போலீசார் எந்த முடிவையும் எடுக்காத வகையில் உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
"நான் கான்பூர்காரன்".. கதறிய ரவுடி.. கொட்டிய மழைக்கு நடுவே.. 60 கேஸ்களுக்கும் ஒரே நாளில் "தீர்ப்பு"
இந்த நிலையில் இன்று அதிகாலை போலீசாரின் பிடியில் இருந்து விகாஸ் துபே தப்பிச் செல்ல முயன்றபோது சுட்டுக் கொன்றதாக உபி போலீசார் தெரிவித்துள்ளனர்.