கத்தார் சென்ற சவுதி இளவரசர் முகமது மின் சல்மான்..4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் புத்துயிர் பெறும் உறவு
டெல்லி: வளைகுடா நாடுகள் உடனான உறவை மேம்படுத்தச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சவுதி இளவரசர் முகமது மின் சல்மான் தற்போது கத்தார் வந்துள்ளார். அங்கு அவர் கத்தார் அதிபர் தமீம் பின் ஹமத் அல் தானியை சந்தித்துப் பேசவுள்ளார்.
சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் தற்போது வளைகுடா நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக அவர் கத்தார் வந்தடைந்தார்,
கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக எம்எல்ஏ வழக்கு: ஜனவரி 3 ஆம் வாரத்தில் விசாரணை
கத்தார் மன்னர் தமீம் பின் ஹமத் அல் தானி உடன் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்
கத்தார் - சவுதி அரபியா
கடந்த நான்கு ஆண்டுகளாக கத்தார் - சவுதி அரபியா இடையேயான உறவில் பல சிக்கல்கள் இருந்த நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தீவிர இஸ்லாமியக் குழுக்களை ஆதரிப்பதாகவும், ஈரான் நாட்டுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டிக் கடந்த 2017ஆம் ஆண்டு சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் கத்தார் உடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்தன. இருப்பினும், கத்தார் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தது.
உச்சி மாநாடு
இப்படிப்பட்ட நிலை தொடர்ந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்கிக்கு முன் சவுதியின் அல்-உலா நகரில் நடந்த உச்சி மாநாட்டிற்குப் பிறகு மீண்டும் சவுதி - கத்தார் உறவு சுமூகமடைய தொடங்கியது. வளைகுடா நாடுகளுக்கு இடையே, குறிப்பாக ஈரான் மற்றும் துருக்கி நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் இந்த சுற்றுப்பயணம் அமைந்துள்ளது.
துருக்கி நிலை
முன்னதாக கடந்த வாரம் தான் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த இரண்டு நாள் பயணமாக கத்தார் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில காலமாகவே பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் கத்தார் - துருக்கி நாடுகள் இணைந்து பணிபுரிந்து வருகிறது. நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள துருக்கி வெளிநாட்டு முதலீடு மற்றும் வர்த்தகத்தை ஈர்க்க வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறது. இதனால் தான் ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா நாடுகளுடன் சமாதான உறவை ஏற்படுத்தும் முயற்சியில் அது இறங்கியுள்ளது.
தீவிர முயற்சியில் சவுதி
கடந்த 2018இல் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி துருக்கியில் உள்ள தூதரகத்தில் வைத்துக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இரு நாட்டு உறவுகள் மோசமடைந்தது. இருப்பினும், அதையெல்லாம் தாண்டி வளைகுடா நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்த தற்போது பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல இருநாட்டு உறவை மேம்படுத்தச் சவுதி அரேபியா - ஈரானுக்கும் இடையே கடந்த ஏப்ரல் முதல் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடந்துள்ளது.
ஐக்கிய அமீரகம்
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் இளவரசர் முகமது பின் சல்மான் ஐக்கிய அமீரகம் சென்றார். இது தொடர்பாக இரு நாடுகளும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், "சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், பஹ்ரைன், குவைத், ஓமன் மற்றும் கத்தார் ஆகியவற்றை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று கூறப்பட்டது. அங்கு இரு நாடுகளுக்கு இடையே 30 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டது. அதன் பிறகு வியாழக்கிழமை அவர் பஹ்ரைனுக்கும், அங்கிருந்து பின்னர் குவைத்திற்கும் சென்றார்,