ஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்
Recommended Video
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்ட பின்னர் ஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் அமைதியை நிலைநாட்டி இருக்கிறோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
370-வது பிரிவு நீக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக இந்தியா டுடே டிவி சேனலுக்கு அமித்ஷா அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவு நீக்கப்பட்டதன் பின்னர் அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இல்லை. துப்பாக்கிச் சூடு உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. 6 போலீஸ் நிலைய பகுதிகளில் மட்டுமே 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. காஷ்மீரில் ஆப்பிள் வர்த்தகம் சுமூகமாக நடந்து கொண்டிருக்கிறது.
சாலைகளில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. வர்த்தக நிறுவனங்கள் படிப்படியாகத் திறக்கப்படுகின்றன. பொதுவாக ஜம்மு காஷ்மீரில் நிலைமை இயல்பானதாகவே இருக்கிறது. வெள்ளிக்கிழமையன்று மக்கள் பள்ளிவாசல்களுக்கு தொழுகை நடத்த செல்கின்றனர். ஜம்மு மற்றும் காஷ்மீர் பிராந்தியங்களில் அமைதியே நிலவுகிறது. செல்போன் சேவைகள் மீண்டும் இயக்கப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கையாக 4,000 பேர் கைது
அம்மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4000 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது 1,000க்கும் குறைவானவர்கள்தான் சிறையில் உள்ளனர். சிலர் அமைதியை சீர்குலைக்க முயற்சித்தால் நிலைமையை கட்டுப்படுத்துவது கடினம் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட்டது. ராணுவத்தினர் மீது கல்வீசித் தாக்கியவர்கள் 800க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பரூக், உமர், மெகபூபா
அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு அமலில் இருந்தபோதே ஷேக் அப்துல்லாவை 11 ஆண்டுகள் ஏன் சிறையில் அடைத்தார்கள்? அப்போது அதிகாரத்தில் இருந்தது காங்கிரஸ் கட்சிதான். பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி அனைவருமே பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு அமலில் இருந்ததால்தான் 40,000 பேர் கொல்லப்பட்டனர். ஆகையால் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டிய நேரம் இது. அதனால்தான் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.
காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல்
அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு நடைமுறையில் இருந்ததால் காஷ்மீர் வளர்ச்சி அடையவில்லை. மிகப் பெரிய ஊழல் அங்கு நடைபெற்றது. தற்போது ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி அடையும் என நம்புகிறேன். தற்போது உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறுகின்றன. உள்ளாட்சித் தேர்தலில் யாரையும் போட்டியிட வேண்டாம் என்று நாங்கள் தடுக்கவில்லை. பிற கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்திருக்கின்றன. நாட்டின் பல இடங்களில் சுயேட்சைகள் அரசியல் கட்சிகள் சின்னங்கள் இல்லாமல் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். ஜனநாயக அரசியலில் போட்டியிட்டுத்தான் ஆக வேண்டும்.
காஷ்மீரில் அமைதி
ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடுவதும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும் வரலாறாக இருந்தது. அதில் பலர் கொல்லப்பட்டும் இருந்தனர். அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு அமலில் இருந்ததால்தான் வளர்ச்சி பெறவில்லை என்பதை அம்மக்கள் புரிந்து கொண்டிருக்கின்றனர். ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த ஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தவில்லை. நமது ராணுவத்தின் நடவடிக்கைகளால் யாரும் மரணிக்கவில்லை.
உலகமே இந்தியாவுக்கு ஆதரவு
பாகிஸ்தானுக்கு ஆதரவாக மலேசியா, துருக்கி, சீனா ஆகியவை குரல் கொடுக்கின்றன. அது அவர்களது கருத்து. ஆனால் ஒட்டுமொத்த உலகமும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவைத்தான் ஆதரிக்கின்றன. நரேந்திர மோடி அரசின் மிகப் பெரிய சாதனை இது. சீனாவைப் பொறுத்தவரை காஷ்மீர் விவகாரத்தில் நம்மை முழுமையாக எதிர்க்கிறார்கள் என நான் நினைக்கவில்லை. அது அவர்களுடைய நிலைப்பாடு. இவ்வாறு அமித்ஷா தெரிவித்துள்ளார்.