இந்த யூனியன் பிரதேசங்களுக்கெல்லாம் சட்டசபை கிடையாது...!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு தனி யூனியன் பிரதேசங்களாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
காஷ்மீரை பிரிக்கும் முன் இந்தியாவில் 29 மாநிலங்கள் இருந்தன. இப்போது ஜம்மு காஷ்மீரை பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு தனி யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக மாநிலங்களின் எண்ணிக்கை 28 ஆக குறைந்துள்ளது. 7 ஆக இருந்த யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
அவற்றின் விவரம் பின்வருமாறு:
- அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள்
- சண்டீகர்
- தாதர் மற்றும் நாகர் ஹவேலி
- டாமன் மற்றும் டையு
- டெல்லி
- லட்சத்தீவுகள்
- புதுச்சேரி
- ஜம்மு- காஷ்மீர்
- லடாக்
முன்னதாக 7 யூனியன் பிரதேசங்களாக இருந்த போது புதுச்சேரி மற்றும் டெல்லி ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கு மட்டுமே சட்டசபை இருந்தது. மற்ற யூனியன் பிரதேசங்களில் சட்டசபை கிடையாது. இதில் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளை மத்திய அரசின் துணை நிலை ஆளுநர் நிர்வகித்து வருகிறார். டாமன் மற்றும் டையூ, தாதர் மற்றும் நாகர் ஹவேலி, சண்டிகர் மற்றும் லடசத்தீவுகளை குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படும் நிர்வாக அதிகாரி நிர்வகித்து வருகிறார்.
இப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் ஜம்மு காஷ்மீர் லடாக் என இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே ஜம்மு காஷ்மீரில் வழக்கம் போல் சட்டசபை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லடாக்கை குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் நிர்வாக அதிகாரி நிர்வகிப்பார். இதன் மூலம் புதுச்சேரி, டெல்லியோடு சேர்த்து தற்போது ஜம்மு காஷ்மீரில் சட்டசபை இருக்கும் என்பதால் சட்டசபை உள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. லடாக் தனி யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட காரணத்தால் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 5ல் இருந்து 6 ஆக உயர்ந்துள்ளது.