தேர்தல் ஆணையரின் போர்க்கொடியால் திடீர் திருப்பம்.. மோடிக்கு எதிரான புகாரில் மீண்டும் விசாரணை!
பிரதமர் மோடி தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்துள்ளார், என்று அவர் மீது அளிக்கப்பட்ட புகார்களில் ஒரு புகார் மீதான விசாரணை மீண்டும் நடைபெற உள்ளது.
டெல்லி: பிரதமர் மோடி தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்துள்ளார், என்று அவர் மீது அளிக்கப்பட்ட புகார்களில் ஒரு புகார் மீதான விசாரணை மீண்டும் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையர் அசோக் லவசா போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில் இந்த புகார் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
பிரதமர் மோடியின் தேர்தல் விதிமுறை மீறல்தான் தற்போது ஹாட் டாப்பிக். இதனால் தேர்தல் ஆணையத்திலேயே நிறைய பிரச்சனைகள் எழுந்துள்ளது. மூன்று தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் தேர்தல் விதிமுறை மீறல் செய்ததாக புகார் உள்ளது. இவர்கள் இருவர் மீதும் 10க்கும் மேற்பட்ட புகார்கள் உள்ளது. இந்த வழக்குகள் மீது ஏற்கனவே தேர்தல் ஆணையம் முடிவெடுத்து இருக்கிறது.
இந்த நிலையில் மோடிக்கு எதிராக அளிக்கப்பட்ட அனைத்து புகார்களிலும் மோடி மீது எந்த தவறும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியது. மொத்தம் மூன்று பேர் இந்த புகாரை விசாரித்தனர். தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் அதிகாரிகள் அசோக் லவசா மற்றும் சுஷில் சந்திரா ஆகியோரை விசாரணை நடத்தினார்கள். இதில் இரண்டு அதிகாரிகள் மோடி மீது தவறு இல்லை என்று முடிவெடுத்து இருக்கிறார்கள். ஆனால் அசோக் லவசா மோடிக்கு எதிராக வாக்களித்தார்.
பிரஸ் மீட்டில் வந்த சிக்னல்.. ஓரம்கட்டப்படும் மோடி.. பிரதமர் பதவிக்கு அடிபோடும் அமித் ஷா?
ஆனால் இவரின் இந்த கருத்து எந்த புகாரிலும் பதிவு செய்யப்படவில்லை. இதை எதிர்த்து தலைமை தேர்தல் ஆணையருக்கு இவர் மூன்று முறை கடிதம் எழுதினார். கடைசியாக நடந்த தேர்தல் ஆணையர் சந்திப்பு கூட்டத்திலும் இவர் கலந்து கொள்ளவில்லை. இது தேர்தல் ஆணையத்தில் பிளவை ஏற்படுத்தி உள்ளது.
மோடி மீதான புகார்களில் மிக முக்கியமான புகார் அவர் நிதி ஆயோக்கை தவறாக பயன்படுத்தியது தொடர்பானது. மோடி பிரச்சாரம் செய்ய செல்லும் முன், அந்த தொகுதி குறித்து நிதி ஆயோக் மூலம் தகவல்களை பெற்று உள்ளார். அங்கு இருக்கும் ஜாதி, மக்கள் தொகை, பிரச்சனைகளை கேட்டு உள்ளார். பின் அதை வைத்து பிரச்சாரத்தை வடிவமைத்துள்ளார் என்று காங்கிரஸ் புகார் அளித்தது.
காங்கிரஸ் கடந்த மே 1ம் தேதி அளித்த புகாரை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது. ஆனால் இதை தேர்தல் ஆணையர் அசோக் லவசா எதிர்த்து இருந்தார். இதற்கு எதிராகவும் லவசா தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் இந்த புகார் மீதான விசாரணையை தேர்தல் ஆணையம் மீண்டும் நடத்த உள்ளது.
நிதி ஆயோக்கிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்க வேண்டும் என்று அசோக் லவசா குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் அசோக் லவசாவின் கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் இதை மீண்டும் விசாரிக்க உள்ளது. இது தேர்தல் களத்தில் மிக முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.