நாயுடு போராட்டத்துக்கு வராத மாயாவதி... திசைக்கொன்றாக பிரிகிறதா எதிர்க்கட்சிகள் கூட்டணி?
டெல்லி:தலைநகர் டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நடத்திய போராட்டத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கலந்து கொள்ளாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தராமல் பிரதமர் மோடி ஏமாற்றிவிட்டார் என்று கூறி, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு போராட்டத்தில் இறங்கினார். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சி என பெரும்பாலான கட்சிகள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன.
ஆனால் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி மட்டும் கலந்து கொள்ள வில்லை. அக்கட்சியின் சார்பில் யாரும் நேரில் வந்தோ அல்லது கடிதம் அல்லது தொலைபேசி வாயிலாகவோ ஆதரவு தெரிவிக்கவில்லை.
போராட்டம் வெற்றி
டெல்லி போராட்டம் வெற்றிபோராட்டம் என்று காங்கிரஸ்,தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முழங்கின. ஆனால்... முக்கிய கட்சிகளில் ஒன்றான பகுஜன் சமாஜ் கட்சி கலந்து கொள்ளாதது பெருத்த கேள்விகளை எழுப்பி உள்ளது.
அழைப்பு இல்லையா?
இந்த போராட்டத்துக்கு முறைப்படியான அழைப்பு இல்லாததால் அவர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார் என்று கூறப்பட்டது. ஆனால், அனைவரை போன்றே அவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக தெலுங்கு தேசம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்தான் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்பட்டது.
அன்றும் அப்படித்தான்
இதற்கு முன்பாக... கடந்தாண்டு டிசம்பர் 10ம் தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த போதும் மாயாவதி வரவில்லை. அவரது கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். அதற்கு அடுத்த நாள் 5 மாநில தேர்தல்களின் முடிவுகள் வெளியாக இருந்ததால் அவர் வராமல் தவிர்த்ததாக கூறப்பட்டது.
ராகுலுக்கு நாயுடு நெருக்கம்
ஆனால்... இந்த கூட்டத்துக்கு அவர் வராமல் தவிர்த்ததற்கு முக்கிய காரணமாக ஒன்று பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு சந்திரபாபு நாயுடு மிக நெருக்கம் என்று மாயாவதி கருதியதால் டெல்லி கூட்டத்தை அவர் புறக்கணித்தார் என்று தகவல்கள் வெளியாகின.
மறுக்கும் நாயுடு
பாஜக எதிர்ப்பு அணியில் பிளவோ என்று எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கும் இந்த நிலையில்.. அது தொடர்பான ஹேஸ்யங்களை சந்திரபாபு நாயுடு திட்ட வட்டமாக மறுத்திருக்கிறார். தகவல் தொடர்பில் ஏற்பட்ட சிறிய பிழை அல்லது இடைவெளிதான். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை... எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாகவே இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.