3 மாநில விவசாய கடன் தள்ளுபடி... காலி கஜானாவை வைத்து கொண்டு ம.பி, ராஜஸ்தான், சத்தீஸ்கர் அவதி
டெல்லி : தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் அளித்த வாக்குறுதியின் படி, 3 மாநிலங்களிலும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அரசு கஜானாவுக்கு நிதிச்சுமை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
அண்மையில் தேர்தல் நடந்து முடிந்த ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அதற்கான தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தால் வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தது
அதன்படி முதல்கட்டமாக மத்தியபிரதேசத்திலும், அதனையடுத்து, சத்தீஸ்ரிலும் வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ராஜஸ்தானிலும் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் 38 ஆயிரம் கோடி வரையும், ராஜஸ்தானில் 18 ஆயிரம் கோடியும், சத்தீஸ்கரில் 6 ஆயிரத்து 100 கோடி வரையும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
மொத்த விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதால் தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளுக்கான நிதி ஆதாரம் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனால் மற்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா என்ற நெருக்கடியும் தற்போது ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, மாநில அரசுகள் வங்கி கடன்களை தள்ளுபடி செய்யும்போது, வங்கிகளுக்கு இழப்பீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என நபார்டு வங்கி அறிவுறுத்தி உள்ளது. அதனால் அரசு கஜானாவுக்கு நிதிச்சுமை ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
குறிப்பாக ஆந்திரா, தமிழ்நாடு மாநிலங்கள் அதிக அளவிலான நிலுவைத் தொகை செலுத்த வேண்டி உள்ளதாகவும், தமிழகத்தில் 2016-ம் ஆண்டில் 6,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 3,200 கோடி ரூபாய் நிலுவைத் தொகை பாக்கி வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.