ராஜ்ய சபா எம்பிக்கள் நீக்கம்... உண்ணாவிரதப் போட்டி... லிஸ்டில் இணைந்தார் சரத் பவார்!!
டெல்லி: ராஜ்ய சபா நடவடிக்கைகளில் இருந்து இந்த தொடர் முழுவதும் நீக்கப்பட்டு இருக்கும் உறுப்பினர்களுக்கு ஆதரவாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் இன்று ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
ராஜ்ய சபாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை வேளாண் மசோதா தாக்கல் செய்தபோது, எதிர்க்கட்சி எம்பிக்கள் விதிமுறைகளை மீறி வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி 8 எம்பிக்களை இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து ராஜ்யசபா தலைவர் வெங்கய்ய நாயுடு நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
இதன்படி, திரிணாமுல் காங் எம்பி டெரக் ஓ பிரைன், டோலா சென், இளமாறம், கதீரம், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், காங்கிரஸ் எம்பி ராஜீவ் சாதவ், நசீர் ஹூசைன், ரிபுன் போரேன், மார்க்சிஸ்ட் எம்பி கேகே ராகேஷ் ஆகிய 8 எம்பிக்கள் இந்த கூட்டத்தொடரில் கலந்து கொள்ள முடியாது.
இதையடுத்து ராஜ்ய சபா தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு துணைத்தலைவர் ஹரிவன்ஷ் சிங் எழுதி இருந்த கடித்ததில், ''எம்பிக்கள் என்னை மிகவும் அவமரியாதை செய்தனர். என் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் என்னால் ஒரு நாள் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. இதைக் கண்டித்து ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளேன்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் ராஜ்ய சபாவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு இருக்கும் எம்பிக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்கள் இந்த தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் உறுப்பினர்களுக்கு ஆதரவாக இன்று முழுவதும் நான் எதையும் சாப்பிடப் போவதில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உறப்பினர்கள் மீதான நடவடிக்கைகளை கண்டித்து இந்த கூட்டத் தொடர் முழுவதும் இரு அவைகளிலும் கலந்து கொள்ளப் போவதில்லை என்று காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, சிவ சேனா ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. லோக் சபாவில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்துள்ளது.