காஷ்மீர் பிரச்சனை முடிந்தது.. அடுத்து அயோத்தி.. அதிரடிக்கு தயாராகும் அமித் ஷா.. இதுதான் திட்டம்?
காஷ்மீர் பிரச்சனையை அதிரடி நடவடிக்கை மூலம் முடிவிற்கு கொண்டு வந்ததாக கூறும் பாஜக அடுத்து அயோத்தி பிரச்சனையை தீர்க்க முடிவு செய்துள்ளது.
டெல்லி: காஷ்மீர் பிரச்சனையை அதிரடி நடவடிக்கை மூலம் முடிவிற்கு கொண்டு வந்ததாக கூறும் பாஜக அடுத்து அயோத்தி பிரச்சனையை தீர்க்க முடிவு செய்துள்ளது. இதற்காக விரைவில் பாஜக அதிரடி அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளது.
1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்து பிடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்று பிரச்சனைதான் இந்த முக்கிய வழக்கிற்கு காரணம் ஆகும்.
இதன் மீதான விசாரணை நடந்து வருகிறது. அயோத்தி வழக்கு தொடர்பான 14 மேல்முறையீட்டு மனுக்கள், மற்றும் புதிய மனு ஒன்று ஆகியவற்றின் மீதான விசாரணை நடந்து வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.
பிரச்சனை
எந்த அமைப்பு அந்த நிலத்திற்கு உரிமை கோர முடியும் என்பதுதான் இந்த பிரச்சனைக்கு காரணம். இந்த சர்ச்சைக்குரிய 2 .77 ஏக்கர் நிலத்தை மனுதாரர்கள் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று அலஹாபாத் நீதிமன்றம் கூறியது. இதை எதிர்த்து சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் உச்ச நீதிமன்றம் சென்றதால் வழக்கு நடந்து வருகிறது.
பாஜக திட்டம்
இந்த வழக்கு தினமும் விசாரிக்கப்பட்டு வருவதால், இன்னும் சில நாட்களில் மொத்தமாக விசாரணை முடிந்துவிடும். அதிகபட்சம், 2 மாதங்களுக்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வந்துவிடும்.இந்த மாதமே இந்த வழக்கில் விசாரணை முடிந்துவிடும். அதன்பின் அடுத்த மாதம் இறுதிக்குள் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன திருப்பம்
இந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வந்த பின் பாஜக ராமர் கோவில் கட்டுவதற்கான திட்டத்தில் இறங்கும் என்று கூறுகிறார்கள். அதாவது தீர்ப்பு பெரும்பாலும் இந்து அமைப்புகளுக்கு சாதகமாக வரும் என்று பாஜக கருதுவதாக கூறுகிறார்கள். அதனால், தீர்ப்பு வந்ததும் ராமர் கோவில் கட்டுவதற்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நினைக்கிறார் என்கிறார்கள்.
அமித் ஷா பிளான்
அக்டோபர் மாதத்தில் இது தொடர்பாக அமித் ஷா முக்கிய அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது என்கிறார்கள். முக்கியமான காஷ்மீர் பிரச்னையை கூட ராணுவத்தை வைத்து எளிதாக சமாளித்த மத்திய அரசு, ஏற்கனவே கட்டுப்பாட்டில் உள்ள உத்தர பிரதேசத்தில் நிலவும் அயோத்தி பிரச்சனையை இன்னும் எளிதாக தீர்க்க வாய்ப்புள்ளது என்று பாஜகவினர் பேசிக்கொள்கிறார்கள்.