இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக ஆர்.வெங்கடரமணி நியமனம்.. கேகே வேணுகோபால் ஓய்வால் ஜனாதிபதி ஒப்புதல்!
டெல்லி: இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக உள்ள கேகே வேணுகோபாலின் பதவிக்காலம் வரும் 30ம் தேதி முடிவடைய உள்ளது. இதனால் புதிய அட்டர்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் ஆர் வெங்கடரமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக இருப்பவர் கேகே வேணுகோபால். 91 வயது நிரம்பிய இவர் கடந்த 2017 முதல் இந்த பதவியில் செயல்பட்டு வருகிறார். அட்டர்னி ஜெனரல் பதவி என்பது 3 ஆண்டுக்கானது. அதன்பிறகு பதவிக்காலத்தை மத்திய அரசால் நீட்டிப்பு செய்ய முடியும்.
இந்நிலையில் தான் கேகே வேணுகோபால் பதவிக்காலம் 2020ல் முடிவுக்கு வந்தது. இருப்பினும் அவருக்கு 2 ஆண்டுகள் வரை நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதன்படி கேகே வேணுகோபாலின் பதவிக்காலம் செப்டம்பர் 30ம் தேதி வரை உள்ளது. இன்னும் சில நாட்களில் அவர் ஓய்வு பெற உள்ளதால் புதிய அட்டர்னி ஜெனரலை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் துவங்கின.
அதன்படி இந்தியாவின் புதிய அட்டர்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் ஆர் வெங்கடரமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கிய நிலையில் நியமனம் தொடர்பான அறிவிப்பை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இவர் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக செயல்பட உள்ளார்.
முன்னதாக கேகே வேணுகோபால் ஓய்வு பெறுவதை தொடர்ந்து இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரலாக இருந்த 67 வயது நிரம்பிய மூத்த வக்கீல் முகுல் ரோஹத்கியை மத்திய அரசு தேர்வு செய்தது. ஆனால் அவர் மீண்டும் அட்டர்னி ஜெனரல் பதவியை ஏற்க மறுத்தார். முகுல் ரோஹத்கி இந்தியாவின் 14வது அட்டர்னி ஜெனரலாக கடந்த 2014 ஜூன் முதல் 2017 ஜூன் வரை செயல்பட்டார். அதன்பிறகு முகுல் ரோஹத்கியின் இடத்தில் தான் கேகே வேணுகோபால் நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.