பிஎம்சி.. எஸ் பேங்க்.. இப்போது லட்சுமி விலாஸ்.. அடுத்தடுத்து சிக்கலில் மாட்டிய 3 வங்கிகள்.. ஷாக்கிங்
டெல்லி: எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் கூட்டுறவு வங்கிகளும், உள்ளூர் வங்கிகளும் நிர்வாக குளறுபடி காரணமாக அடுத்தடுத்து சிக்கலுக்கு உள்ளாகி வருவது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும், அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வரும் லட்சுமி விலாஸ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் moratorium கட்டுப்பாட்டை விதித்துள்ளது. வங்கியின் நிர்வாகத்தில் நிலவி வந்த குளறுபடிகள், பிரச்சனைகள் காரணமாக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
வாராக்கடன் பிரச்சனையில் சிக்கி தவித்து வந்த லட்சுமி விலாஸ் வங்கியை கைமாற்ற அதன் இயக்குனர்கள் கடந்த ஒரு வருடமாகவே முயன்று வந்தனர். இந்த நிலையில்தான் இதற்கு moratorium கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
எடுக்க முடியாது
இதன் காரணமாக இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் டிசம்பர் 16ம் தேதி வரை மொத்தமாக 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். இந்த வங்கியை டிபிஎஸ் வங்கி வாங்க உள்ளது. ரிசர்வ் வங்கி மற்றும் செபியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு தற்போது இந்த வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களில் சிக்கலுக்கு உள்ளாகும் மூன்றாவது பெரிய வங்கி லட்சுமி விலாஸ் வங்கி ஆகும்.
மூன்றாவது வங்கி
கடந்த 2019ம் இதேபோல் பஞ்சாப் மற்றும் மும்பை மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி லிமிடெட் (PMC) வங்கியில் இதேபோல் கட்டுப்பாட்டுக்குள் விதிக்கப்பட்டது. அந்த வங்கியின் நிதி மோசடி புகார் காரணமாக ஆர்பிஐ அதிரடியாக செயல்பட்டு இதில் பணம் எடுக்க கட்டுப்பாடுகளை விதித்தது. அதேபோல் புதிய கடன் கொடுக்கவும் கட்டுப்பாடுகளை விதித்தது. 1000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு பின் அது 10000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
மக்கள்
இந்த பிஎம்சி வங்கி நிதிமோசடி புகாரில் சிக்கி திவால் ஆன நிலையில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மும்பை, பஞ்சாப் பகுதிகளில் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் இதனால் கடுமையாக அவதிப்பட்டனர். சிலர் சிகிச்சைக்கு பணம் எடுக்க முடியாமல் பலியான சோகமும் கூட நடந்தது. பஞ்சாப் மற்றும் மும்பை வங்கியை போலவே எஸ் பேங்கும் இதேபோல் சிக்கலில் மாட்டியது.
வாராக்கடன்
வாராக்கடன் அதிகரித்ததால் நிதிச் சுமை ஏற்பட்டு, தனியார் வங்கியான எஸ் பேங்க் சிக்கலில் மாட்டி தவித்து வந்தது. அதேபோல் நிர்வாக ரீதியாகவும், இயக்குனர்களுக்கு இடையிலும் சில பிரச்சனைகள் எஸ் பேங்கில் நிலவி வந்தது. இந்த நிலையில்தான் அந்த வங்கியை ஆர்பிஐ தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, நிர்வாக பணிகளை கண்காணித்தது.
மாற்றம்
அதேபோல் எஸ் பேங்கில் வைப்பு தொகை வைத்திருப்போர் அதிகபட்சமாக ரூ.50,000 வரை மட்டுமே பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தற்போது இதேபோன்ற கட்டுப்பாடு லட்சுமி விலாஸ் வங்கிக்கு விதிக்கப்பட்டுள்ளது. எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் கூட்டுறவு வங்கிகளும், உள்ளூர் வங்கிகளும் நிர்வாக குளறுபடி காரணமாக அடுத்தடுத்து சிக்கலுக்கு உள்ளாகி வருவது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.