ஒரு முறை அல்ல..3முறை அவமானப்படுத்தப்பட்டேன்.. ராஜினாமா செய்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் குமுறல்
டெல்லி: இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அமரீந்தர் சிங், தான் மூன்று முறை அவமானப்படுவதாகவும் தன்னை காங்கிரஸ் தலைமை நம்பாததால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் தெரிவித்தார். மேலும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நேரம் வரும்போது அறிவிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் பல ஆண்டுகளாகவே பனிப்போர் நீடித்து வந்தது.
அமரீந்தர் சிங்கின் கடுமையான எதிர்ப்பை தாண்டியும் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட்டது. அடுத்தாண்டு நடைபெறும் பஞ்சாப் சட்டசபைத் தேர்தலைக் கருத்தில் கொண்ட இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
நவ்ஜோத்சிங் சித்துவுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு- தேசபாதுகாப்புக்கே பெரும் ஆபத்து- அமரீந்தர்சிங் பகீர்
ராஜினாமா
இருப்பினும், தனது எதிர்ப்பை மீறி நவ்ஜோத் சித்துவுக்கு பஞ்சாப் மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டதால் கட்சித் தலைமையின் மீது அமரீந்தர் சிங் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் பஞ்சாப் முதல்வர் பதவியிலிருந்து அமரீந்தர் விலகியுள்ளார். இன்னும் சில மாதங்களில் அங்குத் தேர்தல் நடைபெறும் நிலையில், இது மிக முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையில், தான் ஒரு முறை அல்ல, மூன்று முறை அவமானப்படுத்தப்பட்டதாகவும் சரியான நேரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் அமரீந்தர் சிங் கூறியுள்ளார்.
3 முறை அவமானப்படுத்தப்பட்டேன்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமரீந்தர் சிங், "நான் போதுமான அளவு அவமானத்தைச் சந்தித்து விட்டதாகச் சோனியா காந்தியிடம் கூறினேன். இந்த மாதிரியான அவமானத்தை மூன்றாவது முறையாகச் சந்திக்கிறேன். இம்மாதிரியான அவமானத்தைச் சந்தித்த பிறகும் என்னால் முதல்வராகத் தொடர முடியாது. கட்சியைவிட்டு வெளியேறி புதிதாக ஒரு கட்சியைத் தொடங்குவதும் ஒரு யோசனை தான். ஆனால், தற்சமயத்தில் நான் காங்கிரஸ் கட்சியிலேயே உள்ளேன். என்னைக் கடந்த 52 ஆண்டுகளாக ஆதரித்து வந்த மக்களிடம் கருத்துக் கேட்க முடிவு செய்துள்ளேன். சரியான நேரம் வரும்போது எனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன்.
என் மீது நம்பிக்கை இல்லை
வெளிப்படையாகக் காங்கிரஸ் தலைமைக்கு என் மீது நம்பிக்கை இல்லை என்றே கருதுகிறேன். என்னால் எனது வேலையைச் சரியாகச் செய்ய முடியாது என்று அவர்கள் நினைக்கிறார்கள் போல. ஆனால் இந்த விவகாரத்தைக் கையாண்ட விதம் என்னை அவமான மடுத்தும் வகையிலேயே இருந்தது. இப்போது அவர்கள் (காங்கிரஸ் தலைமை) யாரை நம்புகிறார்களோ அவர்களையே முதல்வராக நியமிக்கலாம். ஆனால், காங்கிரசுக்கு இது வரும் காலத்தில் பல்வேறு பாதிப்புகளைத் தரும். என்றே நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறினார்.
அமரீந்தர் சிங் மகன்
அமரீந்தர் சிங் விலகியது குறித்து அவரின் மகன் மணிந்தேர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், "ராஜினாமா கடிதத்தை ஆளுநர் மாளிகைக்குக் கொண்டு கொடுக்கும்போது அமரீந்தர் சிங்குடன் இருந்தது பெருமையாக இருந்தது. ஒரு குடும்பத்தின் தலைவராக ஒரு புதிய தொடக்கத்திற்கு எங்களை வழி நடத்தியுள்ளார்" எனப் பதிவிட்டுள்ளார். தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், அமரீந்தர் ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அனைத்துக் கட்சி கூட்டம்
முன்னதாக காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டத்தை அமரீந்தர் சிங் கூட்டியுள்ளார். 117 எம்எல்ஏக்கள் இருக்கும் பஞ்சாப் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 80 எம்எல்ஏக்கள் உள்ளனர். அமரீந்தர் சிங் கூட்டிய கூட்டத்தில் நான்கு அமைச்சர்கள் உள்பட 15 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே காங்கிரஸ் கட்சிக்குத் தனது எம்எல்ஏக்கள் பலத்தைக் காட்டி அழுத்தம் தரும் வகையில் இந்தக் கூட்டத்தை அவர் கூட்டியிருக்கலாம் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அடுத்த முதல்வர் யார்
அமரீந்தர் சிங்கை நீக்கி விட்டு வேறு யாருக்காவது முதல்வர் பதவியை அளிக்க வேண்டும் என ஐம்பது எம்எல்ஏக்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியதாகக் கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதன் காரணமாக நேற்று இரவு எம்எல்ஏக்களின் அவசர கூட்டம் கூட்டப் பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் சுனில் ஜக்கர், பிரதாப் சிங் பஜ்வா, பீம்சிங் பேரன் ரவ்நீட் சிங் பிட்டு ஆகியோரின் எவரேனும் ஒருவருக்கு முதல்வர் பதவி அளிக்கலாம் எனக் காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அதிகரிக்கும் மோதல்
கடந்த சில மாதங்களாகவே பஞ்சாப் காங்கிரசில் குழப்பம் நிலவி வருகிறது. இந்த குழப்பம் சில காலம் குறைந்திருந்த நிலையில், காஷ்மீர், பஞ்சாப் குறித்து நவ்ஜோத் சிங் சித்துவின் அரசியல் ஆலோசகர்கள் சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்து இருந்தனர். இதற்கு அமரீந்தேர் சிங் வெளிப்படையாகவே தனது கண்டனங்களைத் தெரிவித்து இருந்தார். இதையடுத்து இருவருக்கும் இடையேயான மோதல் மேலும் அதிகரித்தது.