பிரச்சனைக்கு நடுவே.. உச்சநீதிமன்றத்துக்கு 5 புதிய நீதிபதிகள்.. மத்திய அரசு ஒப்புதல்.. என்ன நடந்தது?
உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக 5 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கொலிஜியம் பரிந்துரைந்த 5 பேரின் பெயர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட மொத்தம் 34 நீதிபதிகள் இருக்க வேண்டும். தற்பாது 27 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வரும் நிலையில் புதிய 5 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான கொலிஜியம் பரிந்துரையை மத்திய அரசு ஏற்ற நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருப்பவர் கிரண் ரிஜூஜி. இவர் சமீபகாலமாக நீதிபதிகள் நியமனத்துக்கான கொலிஜியம் முறையை எதிர்த்து வருகிறார்.
அதாவது இந்தியாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் தான் உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்.
கொலிஜியம் பரிந்துரைகளை நிறுத்தி வைப்பதா? ஜனநாயகத்திற்கு பேராபத்து -முன்னாள் நீதிபதி நாரிமன்
கொலிஜியம் பிரச்சனை
இந்த கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று தான் மத்திய அரசு, நீதிபதிகளை நியமிக்கிறது. இது காலகாலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் இந்த பரிந்துரையில் ஒரு தலைபட்சம் இருப்பதாகவும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களுக்கு பிடித்தவர்களை நீதிபதியாக்க முயற்சிகின்றனர். இதில் மாற்றம் வேண்டும். மத்திய அரசு சார்பில் கொலிஜியத்தில் பிரதிநிதி நியமிக்கப்பட வேண்டும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ தெரிவித்து இருந்தார்.
கிளம்பிய விவாதம்
இது பெரும் விவாதத்தை கிளப்பி இருந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சனம் செய்தனர். சட்டத்துறையையும் கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கொலிஜியத்தின் பரிந்துரை ஏற்கப்படாமல் மத்திய அரசு தாமதிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் தான் தற்போது உச்சநீதிமன்றத்துக்கு 5 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:
உச்சநீதிமன்றத்தில் 34 நீதிபதிகள்
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டிஒய் சந்திரசூட் உள்ளார். உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட மொத்தம் 34 நீதிபதிகள் செயல்படுவார்கள். தற்போது தலைமை நீதிபதி உள்பட 27 பேர் மட்டுமே பணியில் இருந்தனர். 7 பணியிடங்கள் காலியாக இருந்தன. இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளாக கொலிஜியம் 5 பேரின் பெயர்களை தேர்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
புதிய நீதிபதிகள் யார்?
அதன்படி ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டல், பீகார் தலைநகர் பாட்னா உயர்நீதிமன் தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி பிவி சஞ்சய் குமார், பீகார் மாநிலம் பாட்னா உயர்நீதிமன்ற அசானுதீன் அமானுல்லா, அலகாபாத் உயர்நீதிமன் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோரின் பெயர்களை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக கொலிஜியம் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்ற நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார். இதுபற்றி மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன்மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பணியிடத்தில் தற்போது 2 மட்டுமே காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.