முத்தலாக் ஓகே.. காஷ்மீர் டன்.. அயோத்தி டபுள் ஓகே.. பாஜகவின் அடுத்த அதிரடி பிளான் இதுதானா!?
அயோத்தி வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்துள்ள நிலையில் பாஜக கட்சி பெரும்பாலும் பொது சிவில் சட்டம் மீது தனது கவனத்தை திருப்பும் என்று கூறுகிறார்கள்.
Recommended Video
டெல்லி: அயோத்தி வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்துள்ள நிலையில் பாஜக கட்சி பெரும்பாலும் பொது சிவில் சட்டம் மீது தனது அடுத்த கவனத்தை திருப்பும் என்று கூறுகிறார்கள்.
அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அயோத்தி வழக்கில் வெளியாகி இருக்கும் தீர்ப்பின் மூலம் ராமர் கோவில் கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு பெற்றுள்ளது.
இதனால் பாஜக பெரிய சந்தோஷத்தில் உள்ளது. அவர்கள் எதிர்பார்த்த தீர்ப்பு வந்து உள்ளது. இதனால் பாஜக இனி பொது சிவில் சட்டம் தனது பார்வையை செலுத்தும் என்கிறார்கள.
பாஜக ஆட்சி
மத்தியில் பாஜக ஆட்சி அமரும் போதெல்லாம் பொது சிவில் சட்டம் பற்றி பேசப்படுகிறது. 1949ல் நேரு பிரதமராக பதவி ஏற்ற காலத்தில் இருந்தே பொது சிவில் சட்டம் குறித்த விவாதம் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 44வது பிரிவு பொது சிவில் சட்டத்தை பரிந்துரைக்கிறது.
சிவில் சட்டம்
இந்த சட்டத்தின்படி இந்திய குடிமகன்கள் எல்லோருக்கும் ஒரே விதமான சட்டம் இருக்கும். அவர்கள் பின்பற்றும் மதம் சார்ந்த சட்டங்கள் செல்லுபடியாகாது. உதாரணமாக இஸ்லாமிய மக்கள் பொது சிவில் சட்டம் வந்தால் இஸ்லாமிய மக்கள் ஷரியத் சட்டத்தை பின்பற்ற முடியாது.
மாற்றம்
அதேபோல் பல மாநிலங்களில் ஒரே மாதிரியான சட்டங்களை கொண்டு வர சில மாற்றங்கள் செய்ய வேண்டிய சூழல் உருவாகும். இதனால் சிறுபான்மையினர் உரிமை, முக்கியமாக இஸ்லாமியர்கள் உரிமை பாதிக்கும் என்று புகார் எழுந்து வருகிறது. இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய அமைப்புகள் பொது சிவில் சட்டத்தை தீவிரமாக எதிர்த்து வருகிறது.
கருத்து கேட்பு
இந்த பொது சிவில் சட்டம் குறித்து தற்போது மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. முத்தலாக் தடை கொண்டு வரப்பட்டது கூட பொது சிவில் சட்டத்தின் ஒரு படிநிலைதான் என்று வாதம் வைக்கப்படுகிறது. பொது சிவில் சட்டம் மூலம் இஸ்லாமிய பெண்களுக்கு நீதி கிடைக்கும் என்று பாஜக வாதம் வைக்கிறது.
விரைவில்
இந்த நிலையில் முத்தலாக் வெற்றி, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தில் வெற்றி தற்போது அயோத்தி வழக்கில் வெற்றி மூன்றிலும் பாஜக வென்று இருக்கிறது. இது பாஜகவை மனதளவில் தெம்பாக்கி உள்ளது. இதனால் விரைவில் பொது சிவில் சட்டத்தை பாஜக கொண்டு வரும். அடுத்த வருடம் பாஜக இதற்காக தீவிரமாக முயற்சிக்கும் என்று கூறுகிறார்கள்.