விவசாயிகள் போராட்டம்... 2 மாத மவுனம்.. இப்ப வந்து அட்வைஸ் தரும் அரசியல் தலைவர்கள்
புதுடெல்லி : டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியில் திடீர் மோதல்கள் வெடித்துள்ளன. இதனால் டெல்லி நகரமே பதற்றத்துடன் போர்களம் போல் காட்சி தருகிறது.
இந்த நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் அமைதி காக்க விவசாயிகளை வலியுறுத்தி வருகின்றனர். போலீசார் அமைத்திருந்த தடுப்புக்கடை மீறி, போலீசாரை விவசாயிகள் சிலர் தாக்கினர்.
பொது வாகனங்கள் தாக்கப்பட்டப்பதால் போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி, கண்ணீ புகை குண்டுகளை பயன்படுத்தினர். தொடர்ந்து செங்கோட்டையை முற்றுகையிட்டு, அங்கு கொடியை ஏற்றிய போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்தி உள்ளனர்.
நாங்கள் அமைதியை விரும்பினோம்... ஆனால் விவசாயிகள் எல்லை மீறி விட்டனர்... போலீசார் குற்றச்சாட்டு!
பதட்டம் அதிகரிப்பு:
போராட்டத்தின் போது டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்ததால் பதற்றம் அதிகரித்தது. மோதல் காரணமாக டில்லியின் பல பகுதிகளிலும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. கடைகளை மூடவும் வியாபாரிகள் சங்கத்தினரை போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கலவரத்திற்கு யார் காரணம் :
போலீசார் தடியடி நடத்தியதாலேயே, மோதல் வெடித்ததாக விவசாயிகள் கூறுகின்றனர். தடுப்புகளை மீறி, அனுமதிக்கப்பட்ட 5 பாதைகள் தவிர பிற பாதைகள் வழியாக டில்லிக்குள் ஊடுருவியதாலும், வாகனங்களை சேதப்படுத்தியதாலும் தடியடி நடத்தப்பட்டது என போலீசார் கூறுகின்றனர்.
அரசியல் கட்சிகள் காரணமா :
செய்தியாளர்களிடம் பேசிய விவசாயி ராகேஷ் திகாயத் கூறுகையில், பதற்றத்தை ஏற்படுத்த முயன்றது யார் என எங்களுக்கு தெரியும். அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் அவர்கள். அவர்கள் தான் வன்முறையில் ஈடுபட்டனர். அதனால் போராட்டம் விவசாய சங்க தலைவர்களின் கைகளை மீறி சென்று விட்டது என்றார்.
அமைதியாக இருங்கள் :
விவசாயிகள் வன்முறையில் ஈடுபட்டாமல் அமைதி காக்க வேண்டும். போராட்டம், வன்முறை எதற்கும் தீர்வு ஆகாது. ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடம் கிடையாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் ஜெலட், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் விவசாயிகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மோடியை பஞ்சாப் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
2 மாத மவுனம் :
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி, கடந்த 2 மாதங்களாக டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் டில்லியை நோக்கி வரும் விவசாயிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. கடும் குளிரையும் பொருட்படுத்தாது, தற்காலி கூடாரங்கள் அமைத்தும், அரசு தரும் உதவிகளை ஏற்க மறுத்தும் போராடினர். அப்போது எந்த மாநில முதல்வரோ, அரசியல் கட்சி தலைவரோ விவசாயிகளை சந்தித்து பேசவோ, அவர்களிடம் கோரிக்கை வைக்கவோ இல்லை.
குடியரசு தினத்தில் கலவரம் :
குடியரசு தினத்தன்று பேரணி செல்ல போவதாகவும், பட்ஜெட் தாக்கலின் போது பார்லிமென்ட் நோக்கி பேரணி செல்ல போவதாக விவசாயிகள் அறிவித்த போதும் அனைத்து தலைவர்களும் மவுனம் காத்தனர். விவசாயிகளை போராட்டத்தை கைவிடவோ, திரும்பி வரவோ, அந்த மாநில முதல்வர்களோ அல்லது அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிதலைவர்களோ வேண்டுகோள் வைக்கவில்லை. அந்த விவசாயிகளுக்காக மத்திய அரசிடம் பேசவும் முன்வரவில்லை. தற்போது மோதல் நடந்த பிறகு அனைவரும் சமாதானம் செய்ய வருவதாக சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களின் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.