குடியுரிமை சட்டத்துக்கு திடீர் எதிர்ப்பு- சுப்ரீம் கோர்ட் போகிறது அஸ்ஸாம் கன பரிஷத்
டெல்லி: குடியுரிமை மசோதாவுக்கு முதலில் ஆதரவு தெரிவித்த அஸ்ஸாம் கன பரிஷத் அமைப்பு தற்போது எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளது.
முதலில் இந்த மசோதாவை ஆதரித்த இந்த அமைப்பானது தற்போது எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளது. மேலும் மசோதாவை திரும்ப பெற கோரி பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்கவும் இந்த அமைப்பின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2015-ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை இந்தியாவில் குடியேறிய அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் மசோதா அண்மையில் இரு அவைகளிலும் நிறைவேறியது.
முஸ்லிம்கள்
இந்த நிலையில் இந்த மசோதாவில் இடம்பெற்ற 6 மதத்தினருக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில் முஸ்லிம்களின் பெயர் இல்லை. இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்பபதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.
கூட்டணியில் இணைப்பு
இந்த நிலையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2016-க்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம் கன பரிஷத் என்ற அமைப்பு பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது. இந்த நிலையில் லோக்சபா தேர்தலையொட்டி பாஜக, போடோலாந்து மக்கள் முன்னணி இடம்பெற்றுள்ள வடகிழக்கு ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைந்தது.
எதிர்ப்பு
இந்த கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 7 எம்பிக்கள் உள்ளனர். இந்த நிலையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு இந்த அமைப்பு ஆதரவு தெரிவித்தது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த நாள் முதல் வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை தலைவிரித்தாடுகிறது.
போராட்டம்
இந்த நிலையில் அஸ்ஸாமில் மசோதாவை கண்டித்து போராட்டம், தடியடி, துப்பாக்கிச் சூடு என பதற்றமான சூழல் நடந்து வந்த நிலையில் இந்த 7 எம்பிக்களுக்கும் போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குவஹாத்தியில் அம்பாரி பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர்.
அஸ்ஸாம் அமைப்பு
பின்னர் அலுவலகத்துக்குள் சென்று ஜன்னல்களை உடைத்தனர். அங்கிருந்த வாகனங்களையும் சேதப்படுத்தினர். அப்போது போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் அவர்களை கலைத்தனர். இந்த நிலையில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் இந்த அஸ்ஸாம் அமைப்பு தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது.
உச்சநீதிமன்றம்
இதையடுத்து கட்சி தலைமையகத்தில் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது குடியுரிமை மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளனர். மேலும் மசோதாவை திரும்ப பெற கோரி பிரதமர் நரேந்திர மோடியையும் அமித்ஷாவையும் சந்திக்கவுள்ளனர்.