மத்திய அரசின் விவசாய சட்டத்துக்கு எதிர்ப்பு- டெல்லி இந்தியா கேட் அருகே டிராக்டரை எரித்து போராட்டம்!
டெல்லி: மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் வெடித்திருக்கிறது. டெல்லி இந்தியா கேட் அருகே டிராக்டரை எரித்து பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
புதிய வேளாண் மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த மசோதாக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
இப்புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் விவசாயிகள் மிகப் பெரும் எழுச்சியுடன் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் வரலாறு காணாத வகையில் எழுச்சிமிக்க போராட்டங்கள் நடைபெறுகின்றன.
கர்நாடகாவில் இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இணைந்து மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துகின்றன.
இதனிடையே டெல்லியில் பஞ்சாப் இளைஞர் காங்கிரஸார் இந்த புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். டெல்லி இந்தியா கேட் அருகே நடந்த போராட்டத்தின் போது திடீரென டிராக்டர் ஒன்றை சாலையில் உருட்டி விட்டனர். பின்னர் அந்த டிராக்டருக்கும் தீ வைத்து எரித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் இந்தியா கேட் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
#WATCH: Punjab Youth Congress workers stage a protest against the farm laws near India Gate in Delhi. A tractor was also set ablaze. pic.twitter.com/iA5z6WLGXR
— ANI (@ANI) September 28, 2020